தேடி சென்று செய்யும் உதவி, இது அரசியல் வருகைக்கான செயலா? ராகவா லாரன்ஸ் கொடுத்த பதிலடி

By subhashini · 27/5/2024

தன்னை குறித்த அரசியல் சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ் திரைப்பயணம்:

இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இதனை அடுத்து கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து லாரன்ஸ் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார்.

லாரன்ஸ் சமூக சேவை:

சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம், உங்களால் முடிந்தவர்களுக்கு நன்கொடை உதவி செய்யுங்கள் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். பின் நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையின் பிறந்தநாளில் மாற்றம் அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்-கே பி ஒய் பாலா செய்யும் சேவை:

இந்த அறக்கட்டளையில் ராகவா லாரன்ஸ் உடன் நடிகர் எஸ் ஜே சூர்யா, கே பி ஒய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் செயல்படுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ராகவா லாரன்ஸ், கே பி ஒய் பாலா இருவருமே இணைந்து ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட ஏழை பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவிகளை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=-g8WDoVIIiU

லாரன்ஸ் பேட்டி:

அந்த வகையில் வைஷ்ணவி என்ற மாணவி 12 ஆம் வகுப்பில் 592 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். ஆனால், இந்தப் பெண் விண்ணப்பித்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த தகவலை அறந்தாங்கி நிஷா, ராகவா லாரன்ஸுக்கு தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து லாரன்ஸ் அந்த மாணவியை நேரில் சந்தித்து அந்த மாணவி விருப்பப்பட்ட கல்லூரியிலேயே இடமும் வாங்கி கொடுத்திருக்கிறார். பின் அந்த மாணவிக்கு தன்னால் முடிந்த ஊக்கத் தொகையும் கொடுத்திருக்கிறார். இதை எடுத்து பேட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ், நான் அரசியல் வருவதற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், போகப்போக தான் என்னுடைய அன்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேடி சென்று உதவிகளை செய்வதில் ஒருவித சந்தோசம் இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full