பீஸ்ட் படத்தால் நெல்சனை மாற்ற சொன்னாங்க - ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு.

By Rajkumar · 29/7/2023

ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்சில் மனம் விட்டு ரஜினி பேசி இருக்கும் கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

ஜெயிலர் படம்:

எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் பாடல்:

சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. பின் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆடியோ வெளியீட்டு விழா:

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கூறியது, நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. பின் அவர் பீஸ்ட் சூட்டிங் முடிந்து பத்து நாட்களில் விரிவாக கதை சொல்வதாக சொன்னார். பத்து நாளைக்கு பின் பீஸ்ட் சூட் முடிந்து வந்து கதையை சொன்னார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. இந்த படம் பாட்ஷா மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அதற்கெல்லாம் மேலாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும்.

விழாவில் ரஜினி சொன்னது:

ப்ரோமோசூட் செய்து படத்தை அறிவித்தோம். அதற்கு பிறகு தான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் படம் சரியாக போகவில்லை. இயக்குனரை மாற்ற வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் சன் டிவி குழு உடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். பின் சன் டிவி டீம், விமர்சனங்கள் மோசமாக இருந்தது உண்மை தான். ஆனால், வசூல் நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிஸில் நன்றாக தான் இருந்தது என்றெல்லாம் கூறினார்கள். அதேபோல் சூப்பர் ஸ்டார் வார்த்தை என்னைக்குமே தொல்லை தான். பாடலில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் தான் நீக்க சொன்னேன் என்று படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full