வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்திருந்தால் விமர்சனம்தான் வந்திருக்கும்... அஸ்வின் கூறிய காரணம்!

வைபவ் சூர்யவன்ஷி அணியில் இல்லாதது தவறா? இல்லை... அதுதான் அவருக்கு சிறந்த பாடம்! அஸ்வின் விளக்கம்

By S.Dhilip Kumar · 1/7/2026

சூர்யவன்ஷியை சுற்றி எழுந்த விவாதம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காத 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணி தொடரை இழந்த பிறகு, சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது தவறு என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த முடிவை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

'விளையாடி தோற்றிருந்தால் கதையே மாறியிருக்கும்'

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்துக்கு எதிராக அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காமல் தோல்வியடைந்திருந்தால், இன்று அனைவரும் வேறு மாதிரி பேசியிருப்பார்கள். 'ஐபிஎல்லில் மட்டும்தான் அடிக்க முடியும். ஆனால் சீமிங் மற்றும் ஸ்போர்ட்டிங் பிட்ச்களில் அவரால் விளையாட முடியாது' என்ற விமர்சனங்கள்தான் வந்திருக்கும். கிரிக்கெட்டில் கதைகள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.

அதிரடி அணுகுமுறைக்கு சவாலான சூழல்

மேலும், சீமிங் பிட்ச்களில் அதிரடியாக விளையாடும் டி20 அணுகுமுறை எப்போதும் வெற்றியை தராது என்றும் அஸ்வின் விளக்கினார். "வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் யாராக இருந்தாலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் அதே அதிரடி டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால் விரைவாக ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் அணிக்கு வெளியே அமர்ந்திருப்பது எப்போதும் மோசமான அனுபவம் என்று நினைக்கக் கூடாது" என்றார்.

வெளியில் இருந்தாலும் கற்றுக்கொள்ள முடியும்

சூர்யவன்ஷி அணியில் இடம்பெறாமல் இருந்தாலும், அது அவருக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும் என்று அஸ்வின் குறிப்பிட்டார். "அணிக்குள் இருந்து மற்ற வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்கள் செய்யும் தவறுகள் என்ன, அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை கவனிப்பது ஒரு இளம் வீரருக்கு மிகவும் மதிப்புமிக்க அனுபவம். இதுபோன்ற இலவச பாடங்களை வேறு எங்கும் பெற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

15 வயது வீரருக்கு பொறுமை அவசியம்

15 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டின் வாசலில் நிற்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே திறமையை நிரூபித்துள்ள அவர், சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது அதை முழுமையாக பயன்படுத்தினால் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடும் திறன் கொண்டவர் என்றும் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால், தற்போது அணிக்கு வெளியே இருப்பதை தோல்வியாக அல்லாமல், எதிர்கால வெற்றிக்கான தயாரிப்பாக பார்க்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full