2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், ஆர் கே சுரேஷ் தலைமறைவு,குற்றப்பிரிவு போலீஸ்ஸார் வலைவீச்சு.

By Arun · 1/4/2023

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் வெளிநாடு தப்பி ஓடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் ஆர்.கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார்.

பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் படங்களில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார். தற்போது இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இதனிடையே இவர் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மேலும், இவர் பாஜக உறுப்பினராகவும் திகழ்கிறார். இந்த நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் அவர்கள் கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வெளிநாடு தப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை. அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனை அடுத்து போலீசாரும் இந்த புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரமே கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். பின் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதோடு ஆர் கே சுரேஷ் இடம் இந்த நிறுவனத்தின் மூலம் 12 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால், ஆர்கே சுரேஷ் இந்த வழக்கை முடிவு கட்டுவதற்கு உயர் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால், பொருளாதார குற்றப்பிரிவில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் இதற்கெல்லாம் அடிபணியாமல் விசாரணையை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், ரூஸோ கைதான தகவல் வெளியானதும் ஆர் கே சுரேஷ் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஆர்கே சுரேஷ் கைது செய்யப்பட்டால் இதில் பல பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full