இதனால் தான் அவர்களை அனுமதிக்கவில்லை, புதிய வீடியோவை வெளியிட்டு ரோகினி திரையரங்க நிர்வாகம் கொடுத்த விளக்கம்.

By Arun · 30/3/2023

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ரோகிணி திரையரங்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளது.  ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படத்தை காண முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கூடி கொண்டாடி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதல் நாளாக இந்த சர்ச்சை குறித்து தன்னுடைய பெற்ற பழக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் 'அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.என்று கூறி இருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் ''படம் பார்க்க வந்தவர்கள் அவர்களுடன் சில குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது எங்களுடைய திரையரங்க ஊழியர்கள் இரண்டு வயது, ஆறு வயது எட்டு வயது மற்றும் பத்து வயது சிறுவர்களுக்கு மட்டும் தான் அனுமதியை மறுத்திருந்தார்.

ஆனால் அதற்குள்ளாக அங்கே சூழ்ந்த சில ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக சித்தரித்து விட்டார்கள். ஆனால், இதே குடும்பத்தினர் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது' என்று குறிப்பிட்டு அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் திரையரங்கற்குள் அமர்ந்து படத்தை பார்க்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறது.

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் இப்போது மட்டும் எப்படி சிறுவர்களை யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை பார்க்க அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு 12 வயதிற்கு கீழே இருக்கும் சிறுவர்கள் படம் பார்க்க தங்கள் பெற்றோர்களுடன் வந்தால் அவர்களை திரையரங்குக்கு அனுமதிக்கலாம் என்ற ஒரு சட்டமும் இருக்கின்றது என்றும் உங்களது இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full