நல்ல நோக்கத்தில் தான் சொன்னேன், ஆனால்- சர்ச்சை பதிவுக்கு சமந்தா கொடுத்த விளக்கம்

By subhashini · 5/7/2024

மருத்துவம் குறித்து போட்ட பதிவு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, சமந்தா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா அவர்கள் மூக்கில் நெபுலைசர் கருவியை வைத்தவாறு புகைப்படத்தை பதிவிட்டு, பொதுவாக வைரல் தொற்றுக்கு மருந்து கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சித்து பாருங்கள். அதில் ஒரு வழி தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவை மூலம் நெபுலைஸ் செய்வது என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் லிவர் டாக் என்ற மருத்துவர் சமந்தாவின் கருத்தை கண்டித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு செய்ய வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது.

சமந்தா குறித்த சர்ச்சை:

காரணம், அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஒன்று. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியாக இருக்கும் ஒரு முற்போக்கான காலத்தில் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சமந்தா கூறியிருக்கிறார். இவருக்கு அபதாரம் அல்லது சிறை தண்டனை கொடுக்க வேண்டும். மருத்துவம் தொடர்பாக அவருக்கு சிறந்த ஆலோசகர் தேவை என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக சமந்தா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், எனக்கு இந்த சிகிச்சை பலன் அளித்தது. இதனால் நான் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். இதில் பணம் சம்பாதிப்பது போன்ற எந்த ஒரு தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை.

சமந்தா விளக்கம்:

நான் முயற்சித்து பார்க்காமல் அந்த சிகிச்சையை யாருக்கும் சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் பலவகையான மருந்துகளை எடுத்திருந்தேன். எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வகையான மருத்துவத்தையும் நான் எடுத்துக் கொண்டேன். நிபுணர்களின் அறிவுறுத்தல் படி அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டேன். இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் அதிக விலை கொண்டது. என்னால் அந்த சிகிச்சை பெற முடியும். ஆனால், இந்த விலை உயர்ந்த சிகிச்சை பெற முடியாதவர்கள் குறித்தும் நான் அடிக்கடி யோசித்தேன். அதோடு நான் நீண்ட காலமாக மேற்கொண்ட வழக்கமான சிகிச்சைகள் எதுவுமே எனக்கு கை கொடுக்கவில்லை.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சிகிச்சை குறித்து சொன்னது:

இது ஒருவேளை மற்றவர்களுக்கு பயன் அளிக்கலாம். விலை உயர்ந்த சிகிச்சைகள், பயனளிக்காத நீண்டநாள் சிகிச்சைகள் ஆகியவை தான் என்னை மாற்று சிகிச்சையை நோக்கி நகர்த்தி இருந்தது. அது குறித்து படித்தேன். இதற்கு முன் நான் மருத்துவ சிகிச்சைக்காக செலவழித்தலில் ஒரு பகுதிதான் இந்த சிகிச்சைக்கும் செலவழித்தேன். அனுபவம் இல்லாமல் போற போக்கில் நான் எந்த சிகிச்சையும் சொல்லவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் கற்றுக் கொண்டதன் அடிப்படையிலும் நல்ல நோக்கத்திற்காகவும் தான் நான் இதை பரிந்துரைத்தேன்.

மருத்துவர் சொன்ன கருத்துக்கு விளக்கம்:

என்னுடைய பதிவை தாக்கியும், என்னுடைய நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டும் சில கருத்துக்கள் வருவதை அறிந்தேன். மருத்துவர்கள் என்னை விட அதிகமாக அறிந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது. அவருடைய கருத்து நல்ல நோக்கத்திற்கான என்பதையும் அறிவேன். ஆனால், அவர் அதை சொல்லும் விதம் தான் தவறு. நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஒருவேளை நான் பிரபலமாக இருப்பதால் இப்படியான கருத்துக்கள் வருகிறது என்று நினைக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் வகையில் தான் அந்த பதிவை வெளியிட்டேன். மற்றபடி எந்த நோக்கமும் கிடையாது. நான் சொன்ன முறையானது எனக்கு பலன் அளித்தது. அதனை ஒரு ஆப்ஷன் ஆகத்தான் சொன்னேன். எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full