படம் முழுதும் எப்படி அத மட்டும் VFX பண்ண முடியும் - சத்குருவை தாக்கி படம், சென்சார் போர்டின் கேள்வியால் இயக்குனர் ஆதங்கம்.

By subhashini · 23/1/2024

சமூக விரோதி படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்தது தொடர்பாக இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜியோன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் சமூக விரோதி. இந்த படத்தில் பிரஜின், வனிதா விஜயகுமார், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் என்ற வரிகளில் இந்த படத்தின் போஸ்டர் இருந்தது. இந்த படத்தை ஜியோன் ராஜாவே தயாரித்து இருக்கிறது.

இது இவருடைய இரண்டாவது படம் என்றே சொல்லலாம். இதற்கு முன் இவர் பொது நலன் கருதி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சமூக விரோதி படம் நாட்டில் நிறைய இடங்களில் நடக்கும் கந்துவட்டி கொடுமைகளை குறித்து கதை. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்தது. இதை அடுத்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான சீயோன் ராஜா அவர்கள் சமூக விரோதி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்க விண்ணப்பித்திருக்கிறார்.

சீயோன் ராஜா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சீயோன் ராஜா பேட்டியில், இது உண்மை சம்பவம் கிடையாது. முழுக்க முழுக்க கற்பனையான கதை. சமூக விரோதி யார்? அவர்களை உருவாக்குபவர்கள் யார்? அவர்களை அடையாளம் காட்டுப்பவர்களுடைய நோக்கம் என்ன? இப்படி பல விஷயங்களை யாரையும் குறிப்பிடாமல் சமூக அக்கறையோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். தனிப்பட்ட மனிதர்கள் யாரையும் குறிப்பிடுவது எங்கள் நோக்கம் இல்லை. இதை நான் தெளிவுப் படுத்திக் கொள்கிறேன். இன்றைக்கு சமுதாயத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் இருக்கிறார்கள்.

படம் குறித்த சர்ச்சை:

அந்த இளைஞர்கள் போதைக்கு எப்படி அடிமையாகிறார்கள்? அவர்களை வழிநடத்துவது யார்? என்பதை பற்றி எல்லாம் கற்பனையாக எழுதி இயக்கி இருக்கிறேன். சமீபத்தில் தான் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்தார்கள். பின் அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் தியேட்டருக்கு வெளியே ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதன் பிறகு எங்களை கூப்பிட்டார்கள். அப்போது அவர்கள், ஒரு கதாபாத்திரத்தோட தாடியை கிராபிக்ஸ் பண்ணி மாற்ற முடியுமா? என்று கேட்டார்கள். உடனே நாங்கள், ஏற்கனவே படத்துக்கு நிறைய செலவு செய்து விட்டோம். அதனால் படம் முழுவதும் கிராபிக்ஸ் பண்ணுவது சாத்தியம் கிடையாது என்று சொன்னோம்.

தணிக்கை குழு சொன்னது:

அதோடு அவர்கள், எதற்கு கிராபிக்ஸ் பண்ணனும்? என்ற காரணத்தையும் சொல்லவில்லை. பின் அவர்கள், நீங்க கிராபிக்ஸ் பண்ணதுக்கு பிறகு தான் எந்தெந்த சீன் நீக்க வேண்டும்? என்ன சர்டிபிகேட் என்பது குறித்து சொல்லுவோம் என்றெல்லாம் சொன்னார்கள். அவங்க சரியான நோக்கத்தோடு எங்களிடம் சொன்னது மாதிரி தெரியவில்லை. ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்து விண்ணப்பித்தும் விட்டோம். இன்றைக்கு இருக்கிற இளைனர்கள் தவறான வழிக்கு அழைத்துக் கொண்டு போய் விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தான் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம்.

இயக்குனர் வேதனை:

மேலும், சென்சார் எதற்காக என் படத்துக்கு தணிகை கொடுக்க மறுக்கிறார்கள் என்பதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க. அவர்களோட நோக்கம் தான் என்ன? அவங்களோட வரைமுறைகளை சரியாகப் பயன்படுத்துறாங்களா? என்பதிலும் கேள்வியாக இருக்கு. சமூகத்தில் நடக்கிற ஒரு விஷயத்தை தான் கலைஞர்களாகிய நாங்கள் பிரதிபலிக்கிறோம். சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி தான் நாங்கள் சினிமாவில் கொடுக்கிறோம். பொறுப்பான இயக்குனருக்கு இதெல்லாம் வருத்தத்திற்குரியதாய் இருக்கிறது என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full