இவர் படத்தில் காமெடியனாக நடிக்க தயார், சந்தானம் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

By krithika · 18/1/2025

ஆர்யாவுக்காக நான் மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் என சந்தானம் கூறியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது 'மன்மதன்' படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தார்.

அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பலப்பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார். காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த பொது சந்தானம் இனிமேல் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், அறை எண் 305 இல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மத கஜ ராஜா படம்:

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சந்தானம் காமெடியனாக நடித்த 'மதகஜராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமலே இருந்தது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இயக்குனர் சுந்தர் சி இயக்கியப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/shorts/FRb5cxfI_gM

ரசிகர்களின் ஏக்கம்:

குறிப்பாக, இந்த படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதோடு சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்றும் அவரது காமெடியை தாங்கள் மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் சந்தானம் நிகழ்ச்சி ஒன்றில் தான் மீண்டும் நடிகர் ஆர்யாவுக்காக காமெடியனாக நடிக்க தயார் என பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

சந்தானம் வீடியோ:

அதில், நான் என்னதான் இன்றைக்கு கதாநாயகனாக நடித்தாலும், ஆர்யா போன்ற ஒரு நண்பனுக்காக 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படம் எப்போது தொடங்கினாலும் அதில் நான் தான் காமெடியன். இதற்கு காரணமே ஆர்யா தான். ஆர்யா போன்ற நண்பனுக்காக நான் இதைச் செய்வேன். என்னை பல பேர் இரண்டு கதாநாயகர்கள் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க அழைத்தார்கள். சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க கூட அழைத்தார்கள். ஆனால், நான் எதற்கும் ஓகே சொல்லவில்லை.

ஆர்யாவுக்காக நடிப்பேன்:

ஆனால், ஆர்யா 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' அல்லது வேறு எந்த படத்திற்கு என்னை அழைத்தாலும் நான் கட்டாயம் காமெடியனாக நடிப்பேன். காரணம் அந்த அளவுக்கு ஆர்யா எனது நண்பன். அவன் மீது எனக்கு அந்த அளவிற்கு நட்பு உள்ளது என சந்தானம் பேசியிருக்கிறார். தற்போது சந்தானத்தின் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள், சந்தனத்திற்காகவே நாங்கள் பார்ப்போம் என இயக்குனர் ராஜேஷுக்கு ரசிகர்கள் குறைக்க வைத்து வருகிறார்களாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full