அப்போ இதெல்லாம் என்ன ? ஜெய் பீம் குறித்த கருத்தால் கேலிக்கு உள்ளான சந்தானம். ட்ரெண்டிங்கில் வந்த சாதிவெறி_சந்தானம் ஹேஷ் டேக்.

By subhashini · 17/11/2021

யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம். ஆனால், அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள் என்று ஜெய் பீம் படம் சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெய் பீம் இருக்கிறது. இந்த படம் குறித்து தமிழக முதல்வர் தொடங்கி சாதாரண மக்கள் வரை என பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.

மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து வன்னியர் சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர். இதனால் திரையுலகினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும், சூர்யாவிற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தானம் அவர்கள் சபாபதி படத்தின் பிரஸ்மீட் விழாவில் ஜெய் பீம் படம் குறித்து கூறி இருக்கிறார். நடிகர் சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனால் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சந்தானம் இடம் ஜெய் பீம் படம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சந்தானம் அவர்கள் கூறியது, ஜெய் பீம் படம் மட்டுமில்லை, எந்த படமாக இருந்தாலும் நாம் எந்தக் கருத்தைச் சொல்ல வேண்டுமோ அதை உயர்த்தி சொல்ல வேண்டும். உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேச வேண்டும் என்றால் அவர்களை உயர்த்தி பேசலாம். அது தப்பில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் தவறு, தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது. இதுதான் என்னுடைய கருத்து. சினிமா என்பது ஒரு இரண்டு மணி நேரம் பொழுதுபோக்கு. அதை எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய நிகழ்வு.

அதனால் படத்தில் யாரை வேணாலும் உயர்த்திப் பேசலாம். ஆனால், அடுத்தவர்களை தாழ்த்தி பேசுவது தேவையில்லாத விஷயம். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள் நான் திருத்திக் கொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன் என்று சந்தானம் கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சந்தானத்தை பலரும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சந்தானத்தின் பல படங்களில் அவர் பேசிய காமெடி காட்சிகளை வைத்தே சந்தானத்தை கலாய்த்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. மேலும், ட்விட்டரில் சில தினங்களுக்கு முன்பு சந்தானத்தின் சபாபதி படத்தின் போஸ்டர் குறித்து பல அமைப்புகளும் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full