சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த 24 ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். இவரது விமர்சனம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வலிமை படத்தை கழுவி ஊற்றியது மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார்.

டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தையும் உருவ கேலி செய்துள்ளார். இப்படி ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்து இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையானது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ஜான் கொக்கென் ப்ளூ சட்டை மாறனுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள ப்ளூ சட்டை மாறன், நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர். நான் ஒரு சாதாரண நடிகன்.

Advertisement

நடிகர் ஜான் கொக்கென் அளித்த அறிக்கை:

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவன். எனக்கு உங்களிடம் நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. சினிமா இருந்தால் நீங்களும் இருக்கிறீர்கள். சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்து தான். விமர்சனம் சினிமாவை வளர வைப்பது அதனாலேயே சினிமா விமர்சகர் மதிக்கப்படுகிறான். குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ, அதே அளவு பிறரை மரியாதையாக பேசுவதும் தேவை. சினிமாவில் உழைப்பவர்கள் பலரும் தங்கள் ஈடுபாட்டை, அர்ப்பணிப்பை கொடுத்து உழைப்பவர்கள்.

சினிமா கலைஞர்களின் போராட்டம்:

பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்களை இந்த அடையாளங்களில் நிலைநிறுத்த எத்தனை வருடம் போராடி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். முதலில் நடிகராக தன்னை மக்கள் முன் நிரூபித்த பிறகே அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிறார். அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. நீங்களும் ஒரு படம் இயக்கி இருக்கிறீர்கள்.

Advertisement

விமர்சனத்தால் பாதிக்கப்படுவது:

அதன் வலி வேதனை என்னவென்று உங்களுக்கும் புரியும். எந்தப் படைப்பாளியுமே தன் படைப்பு வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தே படைப்பார்கள். இந்த கொரோனா நிலையில் படப்பிடிப்பு நடத்தி திரைக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை அறிந்தவர் நீங்கள். அது மக்களை சென்று சேர்வது எளிதானது இல்லை. சினிமா எதிர்பார்ப்பது போல நடப்பது இல்லை. கதைகள் சில நேரம் பிடிக்கும், பிடிக்காமல் போகும். அப்படித்தான் சினிமா. நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். தொழில்நுட்பங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்யுங்கள். தமிழ் சினிமாவைப் புரிந்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள்.

Advertisement

விமர்சனத்தால் விளைவது:

இதுவரை நீங்கள் மோசமாக கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். திறமையாக பேசுவது தான் கடினம். அப்படி நீங்கள் மட்டமான சொற்களால் விமர்சிப்பது மட்டமான சினிமா என்று சொல்லாமல் விமர்சனத்தையே மட்டமானது என்று ஆகிவிடும். உங்கள் பின்னால் வரும் விமர்சகர்களுக்கு மரியாதையை மக்களிடையே குறைத்துவிடும். தமிழில் நல்ல சொற்கள் பல லட்சம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நல்ல மரியாதையான சொற்களால் நாகரீக விமர்சனம் செய்யுங்கள்.

நடிகர்களின் நிலை:

பிறரை உங்கள் பக்கம் திரும்புவதற்காக ஈர்ப்பதற்காக இல்லாமல் எல்லோருக்கும் வெற்றியைத் தரும் படி விமர்சியுங்கள். இங்கே சினிமாவை நம்பி சினிமாவில் நிற்க வேண்டும் என்று என்னை போன்று பலர் இருக்கிறார்கள். அவர்களும் வளரவேண்டும். சினிமா இருந்தால் தான் இது எல்லாமே. அதனால் அடுத்து நீங்கள் விமர்சனம் செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வது நல்லது. உங்களால் பலரும் வாழவேண்டும், நீங்களும் நன்றாக இருக்க வேண்டும். சினிமாவில் எத்தனை துறைகள் இருக்கின்றன. அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? பலபேர் சாதிக்க நினைத்து வந்து பாதியில் போகிறார்கள். அதிலும் மீண்டு வருபவர்கள் தான் மக்கள் முன் பெயருடன் நிற்கிறார்கள்.

அஜித் ஸ்டைலில் பஞ்ச் சொன்ன ஜான்:

அதை எல்லாம் நீங்கள் நினைக்க வேண்டும். தங்களின் விமர்சனங்கள் படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்க வேண்டும் தவிர அவர்களை புண்படுத்தும் விதமாகவோ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை தடுக்கும் விதமாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் இதைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்புகிறேன். இது சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகன் ஆகிய என் கோரிக்கை. நான் அஜித் சாரின் பெரிய ரசிகர். அவருடைய ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று, நீங்க என்ன வேணா பண்ணுங்க, உங்களுக்கு பிடித்ததை பண்ணுங்க, ஆனா அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும் நினைக்காதீங்க. வாழு, வாழ விடு! என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement