ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்போகிறோம் - 'ஆதிபுருஷ்' படக்குழு அறிவிப்பு.

By Arun · 6/6/2023

ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்போகிறோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து ஆதிபுருஷ் திரைப்படம் மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான். ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான்.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுகு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து Pan இந்திய படம் என்ற அந்தஸ்தை பெற்றது. அதன் பின்னர் வந்த பாகுபலி 2வும் சரி, சமீபத்தில் வந்த புஷ்பா, RRR படமும் சரி Pan இந்திய லெவலில் வெற்றி பெற்றது.

இப்படி தெலுங்கு படங்கள் Pan இந்திய அந்தஸ்தை பெற்று வந்த நிலையில் கன்னடத்தில் வெளியான Kgf திரைப்படமும் இந்திய அளவில் வெற்றி பெற்று Pan இந்தியா அந்தஸ்த்தை பெற்றது. இப்படி ஒரு நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் 'ஆதிபுருஷ் ' படத்தில் நடித்து இருக்கிறார். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக வெளியான படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தன. படத்தின் காட்சிகள் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஆனாலும் இப்போதும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மீண்டும் இந்த படம் கேலிக்கு வழிவகுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல விதமான விமர்சனங்கங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது.

ஒரு சீட் இல்லை அணைத்து சீட்டும் காலியாக தான் இருக்க போகிறது என்றும், படத்தின் இரண்டாம் காட்சியில் இருந்து அனைத்து இருக்கைகளையும் ஆஞ்சநேயருக்குதான் விடவேண்டும் என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பலரும் கேலி செய்த நிலையில் தற்போது கடவுள் பெயரை பயன்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full