'மாமனார் பிரபல பாடகர், கணவர் நடிகர் ஆனாலும் சினிமாவில்' - `பாண்டவர் பூமி' நடிகை ஷமிதா ஆதங்கம்

By subhashini · 14/12/2021

'தோழா தோழா தோள் கொடு' என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷமிதா. பாண்டவர் பூமி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமிதா. அதற்கு பிறகு இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார்.பின் இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

எங்களுடைய குடும்பமே சினிமா துறையைச் சார்ந்தது தான். இருந்தாலும் எனக்கு ஆக்டிங் ஆசையெல்லாம் பெரிதாக இல்லை. எதேச்சையாக ஒருமுறை என்னை பார்த்த இயக்குனர் சேரன் சார் அவரின் விண்ணோடும் முகிலோடும் படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தினார். அதில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தேன். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. உண்மையை சொல்லணும் என்றால் அது தான் என்னுடைய முதல் பட வாய்ப்பு. அந்த படம் வெளியாகாமல் இருந்தது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். பின் நான் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்.

அதற்கு பிறகு தான் எனக்கு பாண்டவர் பூமி படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் வெற்றியால் எனக்கு தமிழ் சினிமாவில் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று பலரும் சொன்னார்கள். அதன்படியே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பின் ராஜுசுந்தரம் சாருக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், அடுத்தடுத்து நான் நடித்த படங்கள் எல்லாம் ரிலீசாகவில்லை. சினிமா தான் என்னுடைய கேரியர் என நினைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து ஏமாற்றம் தான் எனக்கு கிடைத்தது. மேலும், ரொம்ப காலமாக சினிமாவில் எனக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று காத்திருந்தேன். ஆனால், கடைசியில் எனக்கு ஏமாற்றம், வருத்தம் தான் மிஞ்சியது.

அதற்கு பிறகு தான் சன் டிவியில் சிவசக்தி என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சீரியலில் நடித்த நடிகர் ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். என் கணவரும் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையின் மூலம் தான் பிரபலமானவர். மேலும், சினிமா துறையில் ஜெயிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டம் இருக்கணும் என்று பலரும் சொல்வார்கள். அதை அதிகம் நம்பினேன். என் விஷயத்தில் மட்டும் இல்லை என்னுடைய கணவர் விஷயத்திலும் இதே பிரச்சனைதான். என்னுடைய மாமனார் கணேஷ் ஒரு காலத்தில் பிரபலமான மியூசிக் இயக்குனராக இருந்தவர். சினிமா துறையில் அதிக ஆர்வம் கொண்ட என் கணவர் சினிமாவில் நடிக்க ரொம்பவே முயற்சி செய்தார். அதற்காக தன்னை பல வகையிலும் தயார்படுத்தினார்.

ஆனால், சொல்லிக்கிற மாதிரி எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை. பின் சின்னத்திரையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். அப்படியே நாங்கள் இருவரும் சின்னத்திரையில் கிடைக்கும் ரோல்களில் நடித்து வந்தோம். அப்படித்தான் பல சீரியல்களில் நடித்தேன். தற்போது நான் பேரன்பு சீரியலில் பாசமான அம்மா-- மாமியார் ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் எனக்கு ஏமாற்றம் ஏற்படாது என்று உறுதியாக நம்புகிறேன். இப்போ சீரியல் நடிகர் நடிகைகளுக்கு இடையே ரொமான்ஸ் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நடிப்புக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியாகத்தான் இருக்கிறது என்று கலகலப்பாக பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full