சீரியல் இயக்கத் தடை, சென்னையில் இருக்கக் கூடாது என மிரட்டல்கள் - 'சித்தி' இயக்குனரின் இப்போதைய நிலை

By Rajkumar · 28/6/2024

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் சி ஜே பாஸ்கர். சொல்லப்போனால், விஜய் சேதுபதியை சினிமாவுக்கு போக சொன்னவரே இவர் தானாம். இவர் இயக்கிய பெண் தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் விஜய் சேதுபதி சினிமாவுக்கு போக சொன்னார். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியே கூறியிருந்தார். மேலும், இயக்குனர் சி ஜே பாஸ்கர் அவர்கள் 90-களில் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்ற சித்தி தொடரின் இயக்குனர்ஆவார்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் அண்ணாமலை, வம்சம் போன்ற பல தொடர்களை இயக்கி இருந்தார். அதற்குப் பின் இவர் சின்னத்திரை சீரியலில் இருந்து விலகி தற்போது குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் டிவியில் இருந்தபோது இவர் மீது சில குற்றச்சாட்டுகள் வந்தது. அதனால் தான் இவர் சீரியல் இயக்க தடை விதிக்கப்பட்டதாகவும், டிவியை விட்டு விலகி இருப்பதாகவும் கூறப்பட்டது.

சி ஜே பாஸ்கர் பேட்டி:

இது எந்த அளவிற்கு உண்மை தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் சி ஜே பாஸ்கர், இன்று விஜய் சேதுபதி இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக இருக்கிறார். இருந்தும் அவர் பழதை மறக்காமல் என் பெயரை ஞாபகம் வைத்திருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. அவருடைய சிரிப்பும், நிதானமான பேச்சும் சினிமாவுக்கு செட்டாகும் என்று எனக்கு தோன்றியது. அதை தான் அவரிடம் சொன்னேன்.

சீரியல் குறித்து சொன்னது:

அவர் மட்டும் இல்லாமல் அட்டக்கத்தி தினேஷும் என்னுடன் என்னிடம் நடித்தவர் தான். இப்போது அவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார். மேலும், சித்தி தொடர் வெளியான போது என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சித்தி என்று கூப்பிடுவதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். அதற்கு முழுக்க முழுக்க ராடான் நிறுவனத்துக்கும் சன் டிவி நிறுவனத்துக்கும் தான் நன்றி சொல்லணும். நான் பொருளாதார ரீதியாக என்னுடைய வாழ்க்கையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ராதிகா மேடம்.

குடும்பம் குறித்து சொன்னது:

அப்போதெல்லாம் நான் பரபரப்ன்னு இருந்தேன். வீட்டில் என்னுடைய பையன் என்ன படிக்கிறான் என்பது கூட எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு பிஸியாக இருந்தேன். என்னுடைய குடும்பத்தை மனைவி கவனித்துக் கொண்டதால் தான் என்னால் சீரியல் எடுக்க முடிந்தது. சித்தி சீரியலுக்கு பிறகு நிறைய சீரியல் பண்ணேன். முன்பு போல் இப்போது டிவியில் இயக்குனர்களுக்கு நிலை இல்லை என்று கேள்விப்பட்டேன். திரும்பவும் சீரியல் இயக்கிய வருவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். என் கதையை பண்ண முடிந்தால் வரலாம் என்ற எண்ணம் இருக்கிறது பார்க்கலாம்.

சீரியல் இயக்காத காரணம்:

என்னுடைய சீரியலுக்கு தடை விதிக்கப்பட்டது என்றெல்லாம் பல சர்ச்சைகள் எழுந்தது. அது ஒரு பெரிய அரசியல். அது தொடர்பாக சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. என்னிடம் வேலை செய்த சிலரே சில அமைப்புகளில் பதவிக்கு வந்து எனக்கு எதிராக சில விஷயங்களை செய்து என்னை ஓரம் கட்டி விட்டார்கள். முதலில் சீரியல் இயக்கக் கூடாது என்று சொன்னார்கள். சீரியல் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். அதையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். அதை எல்லாம் விட கொடுமை ஒரு கட்டத்தில் என்னை சென்னையிலேயே இருக்கக்கூடாது என்றெல்லாம் விரட்ட நினைத்தார்கள். அவர்களுக்கு பின்னாடி இயக்கியது வேறு சிலர்தான். அதனால் அமைதியாக ஒதுங்கி விட்டேன். ஆனால், காலம் எனக்கு நல்ல ஒரு தீர்ப்பை தந்தது. என்னை ஒதுக்க நினைத்தவர்களை கடவுள் சீக்கிரத்திலேயே தண்டித்து விட்டார். அதனால் இதற்கு மேல் அதைப்பற்றி நான் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full