சுகன்யா, ‘பறந்து செல்ல வா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். சுகன்யா என்றால் இங்கு ‘சின்னக் கவுண்டர்’ சுகன்யாவே ஞாபகத்துக்கு வருவதால், இவர் ‘சிங்கப்பூர்’ சுகன்யா அல்லது சுகன்யா ராஜா. ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருந்தவருக்கு ஓவர்நைட்டில் கிடைத்தது ‘காலா’ வாய்ப்பு. படத்தில் ரஜினியின் மருமகளாக வருகிறார். ஷூட்டிங் முடிந்த உடனேயே சிங்கப்பூருக்குக் கிளம்பி விட்டவர், ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்ப இருக்கிறாராம்.
காலா’ ஷூட்டிங் நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. தலைவரோட பேச்சு, சிரிப்பு, ஸ்டைல், அவர் டயலாக் பேசறது எல்லாத்தையுமே பக்கத்துல நின்னு ரசிச்சேன். திரையில அவரைப் பார்க்கறப்ப வர்ற விசில் சத்தத்துக்கு அவர் எவ்வளவு உழைக்கிறார்னு கூட இருந்து பார்க்கறவங்களுக்கு மட்டுமே தெரியுது.
படத்துல சில கேரக்டர்களுக்கு அவ்வளவா மேக்-அப் இருக்காது. எனக்கும் அப்படியே. ஆனா ஒரு ஃபேமிலி சாங் சீனுக்கு மேக்-அப் போட வேண்டி வந்தது. அந்த சீன்ல என்னைப் பார்த்தவர், ‘மேக்-அப்’ இல்லாமலேயே அழகாதான இருந்தீங்க’ன்னார். தலைவரோட ஹீரோயின்ஸ் கூட எத்தனை பேர் அவர்கிட்ட இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பாங்கன்னு தெரியலை. அன்னைக்கு நான் அடைஞ்ச் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
ஆகஸ்ட் 22 ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட பிறந்தநாளை சிம்பிளா செலிபிரேட் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு எனக்கு எதிர்ல இருந்து தலைவர் வந்துட்டிருந்தார். என்னைக் கடந்து எங்கேயோ போகப் போறார்னு நினைச்சேன். எங்கிட்ட வந்தவர், ‘மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே’ன்னு வாழ்த்தினார். அதுக்குப் பிறகே என்னோட பிறந்த நாள் அவருக்குத் தெரிஞ்சிருக்குங்கிறது எனக்குத் தெரிஞ்சது.
எனக்கு கேக் ஊட்டி விட்டவர், பரிசா ஒரு ருத்ராட்சை தந்தார். இமயமலைக்கெல்லாம் போயிட்டு வர்றவர்கிட்ட இருந்து அதை வாங்கினதை பெரிய பாக்கியமாக் கருதுறேன். அன்னைக்கே அந்த ருத்ராட்சை என் கழுத்துலயும் ஏறிடுச்சு. உண்மையிலேயே இதை அணிஞ்ச பிறகு என்னை நான் வேற லெவல்ல உணர்கிறேன்’’ என்கிற சுகன்யா, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகும் முடிவில் இருக்கிறாராம்.