சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பினாரா? வசூல் விவரம் இதோ

By subhashini · 11/1/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.

பராசக்தி படம்:

நேற்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பராசக்தி படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்களில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

படத்தின் வசூல்:

இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 11.50 கோடி வசூலித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. படத்தினுடைய எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இனி வரும் விடுமுறை நாட்களில் பராசக்தி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை:

படத்தினுடைய ஆரம்பத்தில் ஒரு ரயிலை எரிக்கிறார்கள் அதை தொடர்ந்து ரவி மோகன் இந்த கும்பலை பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இந்த ரயில் எரிப்பில் இறந்து போகிறார். இதனால் இனி இந்த வன்முறை எதிர்ப்பு எதுவுமே நடக்கக்கூடாது என்று சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுகிறார். இருந்தாலும் அவருடைய தம்பி அதர்வா வன்முறையை கையில் எடுத்து போராடுகிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் இந்தி படித்து டெல்லிக்கு வேலைக்கு செல்ல நினைக்கிறார். சிவகார்த்திகேயன் கண்முன்னே ஒரு இளைஞன் இறக்கிறார், வேலை கிடைக்காமல் போகிறது. பின் மீண்டும் தன்னுடைய போராட்டத்தை சிவகார்த்திகேயன் கையில் எடுக்கிறார். இறுதியில் சிவகார்த்திகேயன் வென்றாரா? ரவி மோகன் இவர்களை பிடித்தாரா? அதர்வா என்ன ஆனார்? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full