அருண் விஜய் அண்ணன் விட்டுக்கொடுக்காம - வணங்கான் பட விழாவில் SK பேச்சு

By krithika · 19/12/2024

'வணங்கான்' பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கு கொண்டு பல ஆண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.

பாலா 25 மற்றும் வணங்கான் நிகழ்ச்சி:

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விழாவும், பாலாவினுடைய திரைப்பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 'பாலா 25' விழாவும் இணைந்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இதில் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாலா குறித்தும், நடிகர் அருண் விஜய் குறித்தும் சில விஷயங்களை பேசி இருந்தார். அதில், 'சேது' படம் வரும்போது எனக்கு 14 வயசு தான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு பாதிப்பைப் கொடுத்தது.

சிவகார்த்திகேயன் பேசியது:

பாலா சார் படத்தை தியேட்டர்ல பார்த்ததெல்லாம் இப்போ நெனச்சு பார்க்கிறேன். மேலும், 'அமரன்' திரைப்படம் தீபாவளி நெகட்டிவ் எண்டிங் இருக்குன்னு சொல்லும்போது, எல்லோரும் 'பிதா மகன்' படம் தீபாவளிக்கு வந்து ஹிட் ஆச்சுன்னு சொன்னாங்க. அவரைக் கொண்டாடுகிற நிகழ்ச்சியில் நான் இருப்பது எனக்கு பெருமை. ' அவன் இவன்' படத்தோட நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சியை நான் ரொம்ப பயந்து பயந்து பண்ணினேன். பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

அருண் விஜய் குறித்து SK:

அவருடைய திரை மொழி ரொம்ப தனித்துவமானது என்று புகழ்ந்து இருந்தார். அதை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த நிகழ்ச்சிக்கு அருண் விஜய் அண்ணன் தான் 'நீ கண்டிப்பா வரணு'ம் தம்பின்னு கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் சினிமாவில் முயற்சி பண்றது தான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக 'வணங்கான் 'படம் வெற்றி பெற அவரை நான் வாழ்த்துகிறேன். வருகின்ற பொங்கலுக்கு அஜித் சார் படமும் வருது, வணங்கான் படமும் வரட்டும். ரெண்டு படமும் வெற்றி அடையும் என்று சிவகார்த்திகேயன் வாழ்த்தி பேசியிருந்தார்.

அருண் விஜய்- சிவகார்த்திகேயன் சர்ச்சை:

பல ஆண்டுகளாக நடிகர் அருண் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ பகை இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த சர்ச்சைக்கு வணங்கான் பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா தான் முதலில் கமிட்டாகி இருந்தார். பின் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். அதனால் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும் பங்குகொண்டு, இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் எந்த பிரச்சனை இல்லை என்பதை தெளிவுபடுத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full