'நிறைய செருப்பு இருக்கு' பிறந்தநாள் என்றும் பாராமல் விஷாலுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீ ரெட்டி

By Rajkumar · 29/8/2024

தன்னை யார் என்றே தெரியாது என்று சொன்ன விஷாலுக்கு, நடிகை ஸ்ரீ ரெட்டி பதிலடி கொடுத்திருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து, கடந்த 19ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கேரளா சினிமா உலகில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக இதுவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்கள் ஆன மோகன் லால், மம்மூட்டி எதுவுமே பேசவில்லை. இதை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா சில தினங்களுக்கு முன் தான் கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில், மோகன் லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்து விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் பிறந்தநாள்:

இந்நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தனது 48வது பிறந்த நாளை நடிகர் விஷால் கொண்டாடினார். தனது பிறந்தநாளில் விஷால் கோவிலுக்கு சென்று விட்டு, சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து அவர்களிடம் ஆசி பெற்றார். இதற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், தமிழ் சினிமாவிலும் இது போன்ற கமிட்டி விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், யாராவது நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினால் அவர்களை செருப்பைக் கழட்டி அடிங்க என்று கூறினார்.

https://www.youtube.com/watch?v=olTO1P2GGVY

ஸ்ரீ ரெட்டி குறித்து விஷால்:

அப்போது செய்தியாளர்கள், ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தாரே என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு அவர், எனக்கு ஸ்ரீ ரெட்டி யார் என்று தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல் என்று பதிலளித்திருந்தார். அதாவது, நடிகர் விஷால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என பல பேட்டிகளில் ஸ்ரீ ரெட்டி தெரிவித்ததோடு, காவல் நிலையத்தில் புகார் அளித்தது நாம் அறிந்ததே.

ஸ்ரீ ரெட்டி பதிலடி :

தற்போது விஷால் தன்னைக் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதற்கு தனது எக்ஸ் தளத்தில், வணக்கம் வெள்ளை முடி வைத்திருக்கும் மாமா. நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி ஊடகங்களுக்கு முன்னால் பேசும்போது, நாவடக்கத்துடன் பேச வேண்டும். மேலும், நீங்கள் நல்லவர்களிடம் பிரச்சனைகளை உருவாக்கிய விஷயங்கள் அனைத்துமே அனைவருக்கும் தெரியும். நீ ஒரு முழு நேர அயோக்கியன். மீடியா முன்னாடி நல்லவன் மாதிரி நடிக்கறதால நீ நல்லவன் ஆயிட மாட்ட. நீ எவ்வளவு பெரிய ஃபிராடு என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.

செருப்பு வேணுமா :

உன் வாழ்க்கையில் வந்த அனைத்து பெண்களும் உன்னை விட்டு போய் விட்டார்கள் எதற்காக. எதற்காக உன்னுடைய நிச்சயதார்த்தம் கல்யாணத்தில் முடியவில்லை. நீ எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அது எனக்கு தேவையில்லாதது. கண்ணியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே நீ பண்ண பாவங்கள் உன்னை வைத்து செய்து கொண்டிருக்கிறது. மேலும், என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கிறது. அதில் ஒன்று வேண்டும் என்றால் எனக்கு தெரிவிக்கவும் என்று விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full