ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மேல் கல் வீச்சு, போலீஸ் விசாரணையில் சிக்கிய பிரபலத்தின் கார் டிரைவர்கள்.

By subhashini · 27/4/2022

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதியும் இணைந்து இருக்கிறார். இவர் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார்.

ஆனால், இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆதிக்கு இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஹிப்ஹாப் ஆதியின் திரைப்பயணம்:

பின் தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஆதி பாடி இருக்கிறார்.
மேலும், இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதனை தொடர்ந்து இவர் நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அன்பறிவு படம்:

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த சிவகுமாரின் சபதம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஆதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் அன்பறிவு. அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் டபுள் ஆக்சன் திரைப்படமாக அன்பறிவு படம் இருக்கிறது. இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், ஆஷா சரத், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

ஹிப்ஹாப் ஆதியின் வீட்டில் கல் வீச்சு:

இப்படி ஒரு நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் வீட்டின் மீது மர்ம நபர் கல் வீசிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனை ஊரில் ஹிப்ஹாப் ஆதிக்கு வீடு ஒன்று உள்ளது. சமீபத்தில் மர்ம நபர்கள் சிலர் ஹிப் ஹாப் ஆதியின் வீட்டின் மேல் கற்களை வீசி தாக்கி இருக்கின்றனர். இதனால் ஆதியின் வீட்டின் முன்பக்க கதவு சேதமாகி இருக்கிறது. இதை பார்த்த எதிர் வீட்டில் வசிப்பவர்கள் காவல் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தகவல் அளித்து இருக்கிறார்கள். பின் போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்கள்.

கல்வீசிய மர்ம நபர்கள் கைது:

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த போது அங்கு வந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்து அந்த காரின் உரிமையாளரான நடிகர் அஜய் வாண்டையாரை விசாரித்து இருக்கிறார்கள். அப்போது விசாரணையின்போது அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநர்கள் பிரேம்குமார் மற்றும் அஜித் என்பது தெரியவந்து இருக்கிறது. பின் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் இருவரும் குடிபோதையில் ஆதியின் வீடு என்பது தெரியாமல் கல்வீசி தாக்கியதாக கூறி இருக்கின்றனர். அதோடு இதற்கு பின்னால் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full