மிகவும் வேதனையாக இருக்கிறது. உதவுங்கள் பிரதமர் மோடி என்று நடிகை சுதா சந்திரன் வெளியிட்ட கண்கலங்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுதா சந்திரன். இவர் நடிகை மட்டுமில்லாமல் மிக சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். நடிகை சுதா சந்திரன் அவர்கள் விபத்து ஒன்றில் தன்னுடைய காலை இழந்து பின் செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்தி உள்ளார். இருந்தாலும் இவர் பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் போதிய அளவில் வசதிகள் செய்து தரப்படவில்லை. மாற்று திறனாளிகள் செல்லும் அளவிற்கு பாதைகள் இந்தியாவில் பெரும்பாலான இடங்களிலும் இல்லை. அவர்கள் வீல்சேரில் செல்லும் அளவிற்கு வசதிகளும் இல்லை. ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் மாற்று திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. இந்த நிலையில் நடிகை சுதா சந்திரன் அவர்கள் விமான நிலையத்தில் தான் எதிர்கொண்ட சிரமத்தை குறித்து வீடியோவாக வெளியிட்டு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பிரதமர் மோடிக்கு வணக்கம். அரசுக்கும் உங்களுக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நான் சுதா சந்திரன் நடிகை, நடனக்கலைஞர். எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

என் தொழில் காரணமாக ஒவ்வொரு முறை நான் விமான நிலையம் செல்லும் போதும் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படும் போது என்னுடைய செயற்கை மூட்டையை சேர்த்து “ஈடிடி டிடக்டர்” சோதனை (வெடிகுண்டு சோதனை) செய்ய சொல்வேன். ஆனால், அங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை நம்பாமல் எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டடு இருப்பதை எடுத்து வெளியே காட்ட சொல்வார்கள். என்னுடைய செயற்கை மூட்டை நான் எப்படி எடுத்து வெளியே காட்ட முடியும்? இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்படும் போதெல்லாம் இந்த பிரச்சனையை நான் எதிர்கொள்கிறேன்.

இதுதான் நம்முடைய நாட்டில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பா? மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மரியாதையே கிடையாதா? ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் நடக்கும் இந்த சோதனை எனக்கு மிகவும் வேதனையை கொடுக்கிறது. என்னுடைய கோரிக்கையை அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நான் நம்புகிறேன். உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்று சுதா சந்திரன் கண்கலங்கியபடி உருக்கமான கோரிக்கை போட்டிருந்தார். தற்போது இவர் போட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement