அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரஹ்மான் - அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் போலீசில் புகார். இதான் காரணம்.

By subhashini · 27/9/2023

ஏ ஆர் ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018ல் ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதற்காக 29.50 லட்சம் ரூபாய் முன்பணமாக ஏ ஆர் ரகுமானுக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால், அப்போது இருந்த அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை. இதனால் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏ ஆர் ரகுமானிடம் கொடுத்த முன் பணத்தொகையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து காசோலையாக திருப்பித் தந்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரகுமான் மீது புகார்:

ஆனால், அந்த காசோலை வங்கியில் பவுன்ஸ் ஆகி இருக்கிறது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகி செந்தில் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ ஆர் ரகுமான் மீது புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

தற்போது இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கு ஏ ஆர் ரகுமான் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசைக்கும் படங்கள்:

கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர்விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி :

மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த இசை கச்சேரி நடந்தது. இதனால் பல பிரச்சினைகள் நடந்தது. பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பாக பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஏ ஆர் ரகுமானை விமர்சித்தும் இசை கச்சேரி குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full