'ஜெய்பீம்' இரண்டு ஆண்டுகள் நிறைவு - நோக்கம் நிறைவேறியதாக சூர்யா பகிர்ந்த தகவல். என்ன தெரியுமா?

By Arun · 3/11/2023

ஜெய் பீம் படம் தொடர்பாக நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா பதிவிட்டு இருக்கும் ட்விட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஞானவேல். இவர் நடிகர் அசோக்செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் திரையரங்கில் ரீலிஸ் செய்யபடும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில். இந்த படம் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

ஜெய் பீம் படம்:

இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் வெளிவந்து மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இருந்தாலும், ‘ஜெய்பீம்’ பல பிரிவுகளில் விருது பெற்று சாதனை படைத்தது. ஆனால், சமீபத்தில் வழங்கிய தேசிய விருது விழாவில் ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யா பதிவு:

இந்த நிலையில் ஜெய் பீம் படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது தொடர்பாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதற்கு நடிகர் சூர்யாவும் பதில் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும் வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.

பதிவில் சூர்யா சொன்னது:

நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறி இருக்கிறார். மேலும், சூர்யா தனது பதிவுடன் இருளர் சமூகத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல்களையும் இணைத்துள்ளார். அதில், இருளர் சமூகத்து மக்களுக்கு 11,379 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது, 59ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full