அப்பாவை பாத்துக்கோங்க - இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக தந்தைக்கு போன் செய்துள்ள சுஷாந்த்.

By Rajkumar · 15/6/2020

கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். பாலிவுட்டில் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. தற்போது தான் இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் நேற்று (ஜூன் 14)இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த சிச்சோர் என்ற படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், தோனியின் வாழ்கை வரலாற்று படத்திலும் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சுஷாந்த் கடந்த சில வாரமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் மேலும், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை கூட சுஷாந்த் பெற்றுவந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சுஷாந்த் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக தனது தந்தையின் வீட்டில் பணிசெய்யும் லக்ஷ்மி தேவியிடம் "தந்தையை கொரோனா வைரஸிடம் இருந்து மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சுஷாந்த் உருக்கமாக பேசியுள்ளாராம். சுஷாந்தின் தந்தை பாட்னாவில் வசித்து வருகிறார். மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு தான் சுஷாந்தின் அம்மா காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தனது தாய் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதே போல சுஷாந்த் இறந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவரின் முன்னாள் பெண் மேனேஜராக பணியாற்றிய திசா ஷாலின் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்பிற்கு சுஷாந்த் தனது இரங்கலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full