பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவு பதிவு, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.

By Arun · 11/4/2022

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் எஸ் வி சேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் நாடக நடிகர், நகைச்சுவையாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். 1974 ஆம் ஆண்டு முதல் இவர் தன்னுடைய தலை பயணத்தை மேற்கொண்டார். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்து வந்தார். அதற்குப் பிறகு சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் இவர் நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் படங்களை இயக்கி இருந்தார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பயணித்திருக்கிறார்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர், நடுவர், சீரியல் நடிகர் என பல தொழில்களைச் செய்து உள்ளார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். முதலில் இவர் அதிமுகவின் சார்பில் இருந்தார். பிறகு கட்சியிலிருந்து விலகி விட்டார். தற்போது பாஜக பிரமுகராக எஸ்.வி.சேகர் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். பொது விஷயங்களில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சை:

அந்த வகையில் தற்போது இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பதிவு செய்தது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான 4 வழக்குகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு 4 பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக கவர்னர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

எஸ் வி சேகர் மீது 4 வழக்கு:

இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு அவதூறுக்கு பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் மறுபதிவு செய்து பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எஸ் வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ் வி சேகர் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அப்போது எஸ் வி சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியிருப்பது,

விசாரணையில் போலீசில் கூறியது:

சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்ததை மனுதாரர் நீக்கிவிட்டார். அது தொடர்பாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்த ஐகோர்ட்டிலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக உள்ளார் என்று கூறினார். உடனே போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு விசாரணைக்கு ஒருமுறைகூட போலீஸ் முன்பு எஸ் வி சேகர் ஆஜராகவில்லை என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக எஸ் வி சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக அதை மனுதாரர் மறுபதிவு செய்து விட்டார். அவர் தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிபதி அளித்த உத்தரவு:

போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக தயாராக உள்ளார் என்று எஸ் வி சேகர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கூறியிருப்பது, எஸ் வி சேகர் மீது 4 வழக்குகள் உள்ளது. இந்த நான்கு வழக்குகளுக்கும் தனித்தனியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறது என்று உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full