'அவ்வளவு வக்கிரம் ஏன்' - சோசியல் மீடியாவால் நொந்து போய் பேசிய 90ஸ் Vj ஸ்வர்ணமால்யா.

By subhashini · 17/10/2023

சோசியல் மீடியாவில் வரும் நெகட்டிவான விமர்சனங்கள் குறித்து ஸ்வர்ணமால்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் இளசுகளின் ஃபேவரட் விஜேவாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை தற்போது வரை யாராலும் மறக்கமுடியாது. அதே போன்று தான் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா. இவர் 1981 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சிறு வயது முதலே பரதத்தில் அதிக ஆர்வம் உடையவர்.

தனது 3 வயது முதல் பரதம் கற்று வருகிறார் ஸ்வர்ணமால்யா. மேலும், இவர் 17 வயதில் பரதத்திற்கான யுவ கலா பாரதி என்ற விருதினை பெற்றவர். பின்னர் தான் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருந்தார். அதன் பின் இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் எங்கள் அண்ணா, மொழி,வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்தார்.

ஸ்வர்ணமால்யா திரைப்பயணம்:

பின் சில ஆண்டுகள் இவர் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின் பாரதி ராஜா இயக்கிய தேக்கத்தி பொண்ணு, சன் டிவி யில் ஒளிபரப்பான தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் சினிமா துறையை விட்டு முழுவதும் ஒதுங்கி உள்ளார். அதோடு இவர் பரத நாட்டிய பள்ளியை ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பாரதம் கற்றுத்தந்து வருகிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வரும் நெகட்டிவ்வான கமெண்ட் தொடர்பாக சமீபத்தில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் மனிதர்களாகிய நாம் தாம் இருக்கிறோம். வேறு எந்த ஒரு ஜந்தும் கிடையாது. ஆனால், சமீப காலமாக நம்மை சுற்றி இருக்கும் சோசியல் மீடியா ரொம்ப வக்கிரமாக இருக்கிறது.

ஸ்வர்ணமால்யா அளித்த பேட்டி:

யாருக்கும் அதில் பாதுகாப்பில்லை. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பாதுகாப்பு இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு மற்றவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் கமெண்ட் ஆக போட்டுப் பாருங்கள். அதற்கு கீழே ஒரு 25 பேராவது உங்களை கழுவி ஊற்றி இருப்பார்கள். யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாக எல்லோராலும் சண்டை போட முடியும். இந்த காலத்தில் இந்த மாதிரியான சோசியல் மீடியாவில் இருந்து வரக்கூடிய விஷயங்கள் உண்மையிலேயே பல பேரை பாதிக்கிறது.

சோசியல் மீடியா குறித்து சொன்னது:

குறிப்பாக, இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது. பெண்கள் சோசியல் மீடியாவில் சொல்வதற்கு கூட பயப்படுகிறார்கள். நம் வீட்டில் உள்ளவர்களே நாம் பேசும் பேச்சை பெரிதாக கேட்பதில்லை. இதனால் நாம் எதற்கு சோசியல் மீடியாவில் சண்டையிட வேண்டும். அதேபோலத் தான் எந்த மாதிரியான தளங்களில் நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் முன்கூட்டியே இவர்களை இப்படித்தான் என்று எடை போட்டுக்கொண்டு அவர்களைப் பற்றி தவறாக கமெண்ட் போடாதீர்கள்.

பெண்களுக்கு சொன்ன அறிவுரை:

இப்போது உள்ள காலத்தில் யாருக்குமே தனிமனித ஒழுக்கம் என்பது இல்லை. அதனால் இந்த சமுதாயம் வக்கிரமாக மாறிக்கொண்டு செல்கிறது. நீ ஒருத்தரை பற்றி இழிவான கமெண்ட் போட்டால் அது அவர்களை குறிப்பதாக இல்லை. உன்னைப் பற்றியே அது பிரதிபலிப்பதாக அர்த்தம். ஆக மொத்தம், எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது. எதில் ஈடுபட வேண்டும். எதில் ஈடுபடக் கூடாது என்பதை முன்கூட்டியே ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். இந்த எண்ணம் பெண்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இந்த பிரச்சனை பாதியாக குறையும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full