அரசாங்கம் வாக்குறுதி கொடுக்குது ஆனா நிறைவேத்த மாட்டுறாங்க - டெடி கோகுல் ஓபன் டாக்

By subhashini · 16/2/2025

ஆர்யாவின் டெடி படத்தில் நடித்த கோகுல் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் டெடி.

இந்த படத்தில் ஆர்யாவுடன் சாயிஷா, சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. மேலும், இந்த படத்தில் டெடியாக நடித்திருந்தவர் கோகுல். இதை அடுத்து இவர் சில படங்களில் பொம்மை வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் டெடி கோகுல், என்னுடைய சொந்த ஊர் திண்டிவனம்.

கோகுல் பேட்டி:

நான் என்னுடைய அப்பா, அம்மா, என்னுடைய இரண்டு தங்கைகள், தம்பி, என்னுடைய மனைவி, இரண்டு மகள்களுடன் ஒன்றாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுடைய குடும்பம் விவசாயத்தை சேர்ந்தவர்கள். நான் பிகாம் படித்து முடித்து இருக்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கு சினிமா உடைய ஆசை வந்தது. என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தான் டெடி படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானேன். ஆனால், அதற்கு முன்பே நான் விஜய் உடைய மாஸ்டர் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தேன்.

ஆர்யா பற்றி சொன்னது:

என்னுடைய காட்சிகள் வரவில்லை. என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது டெடி படம் தான். அதனை தொடர்ந்து எனக்கு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆர்யாவுடன் எனக்கு நல்ல பழக்கம் கிடைத்தது. அவரும் சாயிஷா மேடமும் சேர்ந்து எனக்கு முதன் முதலாக போனை வாங்கி தந்தார்கள். அவர்கள் இருவருமே என்னை மரியாதையோடு தான் நடத்தி இருந்தார்கள். எப்போ போன் பண்ணாலும் எடுத்து என்னுடன் அன்பாக பேசுவார்கள். சொல்லப்போனால் அவர்கள் எனக்கு அப்பா அம்மா மாதிரி. எனக்காக நிறைய செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=LsoTzHFs7Ow

கோகுல் வைத்த கோரிக்கை:

அவர் தான் என்னை வில்லேஜ் வெப் சீரிஸில் நடிப்பதற்கு சிபாரிசும் செய்திருந்தார். அவரை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன். அதேபோல் சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சினிமாவை மட்டும் நான் நம்பி இல்லை. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். கை,கால் இல்லாதவர்கள், கண்ணு தெரியாதவர்கள் போன மாற்று திறனாளிகளுக்கு தான் வேலை வாய்ப்பு தருகிறார்கள். எங்களைப் போன்ற உயரம் குள்ளமானவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர அதற்காக அரசு அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.

குடும்பம் பற்றி சொன்னது:

சினிமாவின் மூலம் நிரந்தர வருமானம் என்று எங்களுக்கு கிடையாது. அதற்காக நாங்கள் ரொம்பவே கஷ்டம் தான் படுகிறோம். எங்களைப் போன்றோருக்கு நிலையான ஒரு வருமானம் வரும் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அரசாங்கம் தான் அதற்கு முயற்சி செய்யணும். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களை நல்லபடியாக படிக்க வைக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full