தற்போது சோசியல் மீடியாமுழுவதும் பரபரப்பாக பேசி கொண்டு இருப்பது பொம்மன்-பெள்ளி விவகாரம் தான். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு யானைகள் சில மாதமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி.

இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? யானை மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த Elephant Whisperers படம் இந்தியாவின் முதல் ஆஸ்கர் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

Advertisement

ஆஸ்கர் விருது கிடைத்த படம்:

The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக பொம்மன்-பெள்ளி இருவருக்கு பேட்டி எல்லாம் அளித்து இருந்தார்கள். அதோடு இவர்களை பலரும் சந்தித்து புகைப்படம் எடுத்து சென்று இருந்தார்கள். சமீபத்தில் கூட இவர்களை நேரில் சந்தித்து குடியரசு தலைவர் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மீது பொம்மன்- பெள்ளி அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொம்மன்-பெள்ளி அளித்த புகார்:

இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் கார்திகி கோன்சால்வ்ஸ் தங்களை கண்டு கொள்ளவில்லை. செல்போனில் அழைத்து கூட இவர்களை பற்றி பேசவில்லை. மேலும், இந்த ஆவணப்படத்திற்காக இயக்குனர் கார்த்திகி பொம்மன்-பெள்ளி ஆகியோரிடம் பணம் வாங்கி இருக்கிறார். ஆனால், அதை அவர் கொடுக்கவும் இல்லை. இதனை அடுத்து இவர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதன்பின் கார்திகி கோன்சால்வ்ஸ் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை பொம்மன் பெள்ளி இருவரும் வைத்திருக்கிறார்கள்.

Advertisement

இதனை அடுத்து தற்போது பொம்மன், பெள்ளி இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில் அவர், வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிவிட்டோம். உங்களையும் ரகு, பொம்மியையும் வைத்து படம் பண்ண போகிறோம் என்று சொல்லி தான் கார்த்திகி என்ற பெண் வந்தார். சீக்கிரமாகவே நாங்கள் அவரிடம் பழகிவிட்டோம். பெத்த மகள் மாதிரி நினைத்து தான் நாங்கள் கார்த்திகியோடு பழகினோம். இரண்டு வருடமாக வீடியோ எடுத்தார்கள். கல்யாணம் பண்ற மாதிரி எல்லாம் வீடியோ எடுத்தார்கள். ஊர் மக்களுக்கு சாப்பாடு, கோயில் செலவுக்கு உங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள் என்று எல்லாம் கேட்டார்கள்.

Advertisement

அதன் பிறகு திருப்பி கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். என்னோட மகள் இறந்தப்ப வந்த பணத்தை பேத்திக்காக போஸ்ட் ஆபீஸில் சேர்த்து வைத்திருந்தேன். அந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து செலவு செய்தோம். இப்போது வரைக்கும் அந்த பணத்தை கார்த்திகி எங்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை. அது கூட பரவாயில்லை எங்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறேன், கார் வாங்கி கொடுக்கிறேன், பேங்கில் பணம் போட்டு இருக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார் . ஆனால், எங்களுக்கு அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

வங்கி கணக்கில் வெறும் 60,000 ருபாய்

இந்நிலையில் தற்போது எங்களது வங்கி கணக்கில் வெறும் 60,000 ருபாய் தான் கணக்கில் இருக்கின்றது . போன் பண்ணி கேட்டாலும் சரியான பதில் இல்லை. எங்களுக்கு கேட்டு கேட்டு வெறுத்துப் போச்சு. எதுவும் தெரியாமல் எதார்த்தமாக இருந்து இப்படி ஏமாந்து விட்டோம். படிக்காத பழங்குடி மக்கள் தானே நாங்கள் என்று எங்களை ஏமாற்ற நினைச்சா ஏமாத்திட்டுப்‌ போகட்டும். எங்க பேர குழந்தைகளை எப்படியோ படிக்க வைக்கிறோம். கார்த்திகி நல்லா இருந்தா போதும் என்று கலங்கி கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியா பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

படக்குழு விளக்கம் :

இந்த நிலையில் இதுகுறித்து படக்குழு விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘இப்படத்தின் நோக்கம் யானைப் பாதுகாப்பு, வனத்துறையின் முயற்சிகள் மற்றும் அதற்கு பணியாற்றுகின்ற பொம்மன் மற்றும் பெல்லி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாகும். இப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் யானை வளர்ப்பவர்களை பற்றிய உண்மையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் 91 யானைகள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் கட்டவும், யானைகள் முகாமை மேம்படுத்தவும் நன்கொடை அளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைவர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அகாடமி விருது என்பது பொம்மன் மற்றும் பெள்ளி போன்ற பணியாளர்களுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொண்டு வந்த தேசிய பெருமையின் தருணமாகும். படம் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவர் மீதும் எங்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது. மேலும் நல்ல மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement