பிரபல நடிகர் பிரகாஷ் ராஜூக்கு விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருடம் வருடம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், இந்த விருது விழா மே 25ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் பிரகாஷ்ராஜுக்கு மட்டுமில்லாமல் பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகம் அரசியல், பண்பாடு கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்த முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Advertisement

விசிக வெளியிட்ட அறிக்கை:

அந்த வகையில் “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகளை வழங்கி வருகிறோம். இதை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக மார்க்ஸ் மாமணி விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

விருது வாங்கியவர்கள்:

முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர் மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை. பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன

Advertisement

இந்த ஆண்டிற்கான பட்டியல்:

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான அம்பேதகர் சுடர் விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் , பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement

பிரகாஷ்ராஜ் குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார். அதோடு இவர் அரசியலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement