தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? - திருமாவளவன் சொன்ன விளக்கம்
அம்பேத்கரின் புத்தகம் வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொள்ளாதது குறித்து திருமாவளவன் கூறியிருக்கும் விளக்கம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த சட்டமேதை, சமத்துவம், சமூக நீதி வெற்றி பெற போராடியவர், எந்த எல்லைக்கும் சென்று மக்களின் விடுதலைக்காக போராடியவர், அடகு முறைக்கு எதிராக தீர்க்கமாகக் குரல் எழுப்பியவர், இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு வடிவம் கொடுத்தவர், இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் என பல்வேறு முகங்களில் இன்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர் தான் பாபா சாகேப் அம்பேத்கர்.
இவரின் ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'. இந்த நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, ' எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தவெக விஜய் வெளியிடும் புத்தகம்:
பின், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதி அரசர் கே.சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செய்ய செயல்பாட்டாளர் ஆனந்த் டெம்டும்டேவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். மேலும் இந்தப் புத்தகத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி இருக்கும் நிலையில், ஆரம்பச் சலுகையாக இந்த புத்தகம் ரூபாய் 999க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிடுவது அனைத்து அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தொல் திருமாவளவன் விளக்கம் :
.முதலில் இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. தற்போது இதுகுறித்து தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், அம்பேத்கருடைய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் என்ன முரண்பாடு என்றால், விகடன் பதிப்பகத்தின் சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்னும் நூல் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அதை வெளியிடுகிறார். அந்த விழா வெற்றிகரமாக நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள்.
அரசியல் சாயம் பூசப்படுகிறது:
இந்த புத்தகம் உருவாக்கப்படும் போதே , அதற்கான திட்டத்தை வகுத்த போதே ஆதவ் அர்ஜுன் மூலமாக எனக்கு தகவல் வந்தது. என்னுடைய நேர்காணலிலும் அது இடம்பெற்றிருக்கிறது. நானும் அதில் பங்கேற்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப் போனது. மாண்புமிகு முதல்வர் அவர்களும் அதில் பங்கேற்பதாக தான் சொல்லப்பட்டது. இந்த சூழலில் நடிகர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலே ஆற்றிய உரை தமிழக அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ் நாளேடு ஒன்று அதை பூதாகரப்படுத்தி அந்த நிகழ்விற்கே ஒரு அரசியல் சாயத்தை பூசியது. அதனால்தான் அந்த விழாவில் ஒரு சிக்கல் உருவானது.
எந்த முரண்பாடும் இல்லை :
ஒரு நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமே நடந்திருக்க வேண்டிய விழாவை, அரசியல் சாயம் பூசி சர்ச்சைக்கு உண்டாக்கியது அந்த நாளேடு. எனவே விடுதலை சிறுத்தைகள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்து கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக பயணித்து வரும் சூழலில், நானும் அந்த நிகழ்வில் பங்கேற்றால் அதுவும் அரசியல் படுத்தப்படும். அரசியல் சாயம் பூசப்படும். தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குவதற்கு, இதற்கென்று தயாராக இருக்கும் சக்திகள் முயற்சி செய்வார்கள். ஆகவே அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு, விஜய் அவர்கள் மட்டுமே அதில் பங்கேற்கட்டும் என்கிற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம் அவ்வளவுதான். மற்றபடி விஜய் அவர்களோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை.