எதிர் நீச்சல் கொடுத்த சக்ஸஸ், கோலங்கள் 2 அப்டேட் கொடுத்த திருச்செல்வம் - தேவயாணிக்கு பதில் யார்?

By Rajkumar · 7/3/2023

புதிய கதைகளத்துடன் கோலங்கள் 2 சீரியல் வர இருப்பதாக இயக்குனர் திருச்செல்வம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரில் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இந்த தொடர் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.

திருச்செல்வம் சீரியல்கள்:

இப்படி திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாக கொண்ட கதையாக அமைந்திருக்கும். மேலும், திருச்செல்வம் இயக்கிய தொடர்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்று தான் கோலங்கள். இது தொடர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த தொடர் 1533 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது.

கோலங்கள் சீரியல்:

இந்த தொடரில் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். ஆனால், முதலில் இந்த தொடரின் கதாநாயகியாக தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா தான் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போனதனால் தான் தேவயானி நடித்தாராம். தற்போது திருச்செல்வம் அவர்கள் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக நடத்தி வருகிறார்கள். இதை இந்த வீட்டுக்கு கடைசியாக வரும் மருமகள் ஜனனி தட்டி கேட்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது.

திருச்செல்வம் அளித்த பேட்டி:

மேலும், சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோலங்கள்2 சீரியல் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், கோலங்கள் 2 வரப்போகிறது என்று கூறியிருந்தார். ஆனால், அந்த தொடர் குறித்து வேறு எந்த தகவலும் வரவில்லை. கோலங்கள் 2 சீரியலிலும் தேவயானியே நடிக்கப் போகிறாரா? இல்லை வேறு ஒரு நடிகையா? என்பது தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full