ஓட்டுநர் ஷர்மிளா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு - இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட இந்த வீடியோ தான் காரணம்

By Arun · 7/2/2024

இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவால் பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் சில நாட்கள் ட்ரெண்டிங் நபராக இருந்தவர் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா. இவர் கோவை தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவர் தன்னுடைய தந்தையிடம் தான் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார்.

மேலும், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார். பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

அந்த வகையில் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை பேருந்தில் அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். அதன் பின் தான் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா கூறி இருந்தார்.

ஷர்மிளா விவகாரம்:

இதை அடுத்து பேருந்து மேனேஜருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பின் தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து ஷர்மிளாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சேர்ந்து வந்து கொண்டிருந்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,  நடிகருமான கமல்ஹாசன் ஷர்மிளாவை அழைத்து அவருக்கு கார் பரிசாக வழங்கினார்.

இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ :

தற்போது கமல் வாங்கி கொடுத்த காரை ஓட்டி தான் பிழைப்பு நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஷர்மிளா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி ஷர்மிளா சத்திரோடு  கணபதி அருகே கமல் வழங்கிய காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்துள்ளார். அந்த வழியாக வந்த சர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக ராஜேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by sharmila M (@ridersharmila4360)

சைபர் க்ரைமில் புகார் :

அப்போது ஷர்மிளா வீடியோ எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பகுதியில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வீடியோவில் வரும்  லேடி போலீஸ் வண்டிகளை வழிமறித்து, அபராதம் விதிக்காமல் கைநீட்டி பணம் வாங்குகிறார். டிரைவரை கெட்டவார்த்தையில் திட்டுகிறார். யாராக இருந்தாலும் மரியாதை முக்கியம். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பிறகு இந்தத் தவறு நடக்கக் கூடாது. இதை அதிகமாக பகிருங்கள்.” என்று கூறியிருந்தார்.

மூன்று பிரிவுகளில் வழக்கு :

இப்படி ஒரு நிலையில் தன்னை பற்றி தவறான தகவலுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 506(ஐ), 509, 66சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full