படித்தவர்கள் அரசியலுக்கு வரணும், போதை பொருளுக்கு ஆளும் கட்சி - விருது வழங்கும் விழாவில் விஜய் சொன்னது

By subhashini · 28/6/2024

கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கையின் நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு விஜய் அவர்கள் பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கல்வி விருது விழா சென்னையில் இன்று நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் ஊக்கத்தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடக்கிறது.

விழா குறித்த தகவல்:

இரண்டாம் கட்டமாக ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்சியின் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். மேலும், முதற்கட்டமாக சுமார் 800 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கு நேரடியாக விஜய் வந்து மாணவர்களை சந்தித்து பரிசு அளிக்கிறார். அதோடு விழாவில் விஜய், நாங்குநேரி மாணவன் சின்னதுரை அருகில் அமர்ந்திருந்தார்.

விழாவில் விஜய் சொன்னது:

மேலும், இந்த விழாவில் பேசிய விஜய், நடந்து முடிந்த பொதுத் தேர்வில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த விழா சிறப்பாக நடக்க உதவிய ஆனந்திற்க்கும், ராஜேந்திரனுக்கும், கட்சியின் தோழர்களுக்கும் என்னுடைய நன்றி. எதிர்காலத்தின் தமிழக மாணவ மாணவிகளை நேரில் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு பாசிட்டிவ்வான எனர்ஜி இருப்பவர்களை பார்க்கும் போது தானாகவே ஒன்று நடக்கும் என்று சொல்வார்கள். அது எனக்கு இன்று காலை நடந்தது. உங்கள் எல்லோரையும் பார்த்தவுடன் அது நடக்கிறது.

விஜய் சொன்ன அறிவுரை:

நீங்கள் எல்லோருமே அடுத்த கட்டம் நோக்கி போகிறீர்கள். உங்களில் சிலர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியும். அதில் சின்ன தளர்வுகள் ஏற்படலாம். எல்லா தொழிலும் நல்லது தான். ஆனால், நூறு சதவீதம் உழைப்பு போட்டால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். அதில் இருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். நமக்கு இங்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் தலைவர்கள் சொன்னது அரசியல் ரீதியாக மட்டும் இல்லை. நீங்கள் செல்லும் இடத்திலும் தலைவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் சொல்கிறேன். வரும் காலத்தில் அரசியலும் கேரியராக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

விஜய் சொன்ன உறுதிமொழி:

நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள். படிக்கும்போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடுங்கள், நாளிதழ் படியுங்கள். செய்திகள் எல்லோருமே பாருங்கள். உண்மை எது, பொய் எது என்று தெரிந்து கொள்ளுங்கள். இதை புரிந்து கொண்டாலே போதும், சில அரசியல் காட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரங்கள் நம்பாமல் இருக்கலாம். உங்களுடைய அடையாளத்தை இழக்க வேண்டாம். போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பெற்றோர், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்குமே பயமாகத்தான் இருக்கிறது. போதைப் பொருளை தடுக்க ஆளும் அரசு தவறிவிட்டது என பேச நான் வரவில்லை. அதற்கான மேடையும் இது கிடையாது. நம்முடைய பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 'Say No to temporary Pleasure and Say no to drugs' என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full