சமீபகாலமாக, பிரபலங்கள் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது ஃபேஷனாகியுள்ளது. சிலர், இதை வாடிக்கையாகக் கொண்டாலும், அவ்வப்போது சிலர் செய்துவருகின்றனர். ஒரு சிலர், ட்விட்டர் மூலம் தங்கள்மீது வைக்கும் விமர்சனத்துக்கும் பதிலளித்து வருகின்றனர்.
இவ்வாறு செய்வதால், சில நேரம் சர்ச்சைகளும் எழத் தவறுவதில்லை. இதற்கு, விராட் கோலி முதல் நடிகர் பிரசன்னா வரை பல உதாரணங்கள். அந்தவகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதிக்கும் இதேபோன்று ஒரு பிரச்னையைச் சந்தித்த அனுபவம் உண்டு.
தற்போது இதேபோல ஒரு சம்பவம் மீண்டும் உதயநிதிக்கு நிகழ்ந்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை, ஈரோடு ,திருப்பூர் ,கரூர்,மதுரை , நீலகிரி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதைப் பாராட்டி, உதயநிதி ட்வீட் செய்திருந்தார்.
நெட்டிசன் ஒருவர் இந்த ட்வீட்டில் “உதயநிதிக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா?” என்கிற ரீதியில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த உதயநிதி, “ரசிகர்கள் எல்லாம் இல்லை நண்பா. நற்பணி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் நண்பர்கள்” என்று கூலாக பதிலடிகொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவருக்கு நடிகர் பிரசன்னா பதிலளித்து வைரலானது போல, இதுவும் தற்போது வைரலாகிவருகிறது.