“தமிழகம் எக்காரணம் கொண்டும் பாதிக்கக் கூடாது!” – தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த உதயநிதி

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு!

By ·

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இதற்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது. இதுதொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதிக்க முடியாது”

சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசு மீண்டும் தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த சூழலில், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார். அதேபோல், மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எந்த காரணத்திற்காகவும் குறையக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஸ்டாலின்”

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாடு முழுவதும் முதலில் எடுத்துரைத்தவர் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் என உதயநிதி குறிப்பிட்டார். தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் திமுக ஆட்சிக் காலத்திலேயே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஏழு மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மசோதா நகல் எரிப்பு போராட்டமும் நடத்தப்பட்டதாகவும் உதயநிதி கூறினார். நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தோற்கடிக்கப்படுவதற்கு திமுக முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

33% மகளிர் இடஒதுக்கீட்டுக்கு திமுக ஆதரவு

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை திமுக முழுமையாக ஆதரிப்பதாக உதயநிதி தெரிவித்தார். பெண்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கையுடன் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீர்மானத்திற்கு யார் ஆதரவு?

முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுகவுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேநேரத்தில், அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தொகுதி மறுவரையறை விவகாரம் சட்டப்பேரவையிலேயே ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விவாதமாக மாறியது.மாறி மாறி அடித்து கொண்ட காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக | CONG vs DMK vs ADMK

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைத் தடுப்பது மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது ஆகிய மூன்று அம்சங்களை முன்னிறுத்தி இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது. இதனால், வரும் நாட்களில் தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் மேலும் தீவிரமான விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full