தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம் என்றாலும் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். மேலும், இன்று வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இவரை பொள்ளாச்சிக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். அவர் பணியேற்ற சில நாட்களில் அங்கு மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தெரியவருகிறது.

Advertisement

படத்தின் கதை:

பின் இரண்டு சிறுமியை கற்பழித்து கொலை செய்து உள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார் உதயநிதி. ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி நீதியை வாங்கி கொடுத்தாரா? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

உதயநிதி நடிப்பு:

காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் மிரட்டியிருக்கிறார். அதோடு முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருக்கிறார். சட்டத்தை கடைபிடிக்கும் விதம், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் குணம், அனைவரும் சமம் என்று எல்லா இடத்திலுமே உதயநிதி ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும், அம்பேத்கர் பற்றி உதயநிதி பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் கிளாப்ஸ் கிடைத்தது. அடுத்து கதாநாயகியாக தான்யா நடித்திருக்கிறார்.

Advertisement

இவர் குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவரை எடுத்து இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தங்களை தாழ்த்த நினைக்கும் அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரியின் நடிப்பு படத்திற்கு பலமாக உள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் இளவரசு, மயில்சாமியின் நடிப்பும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

Advertisement

இயக்குனர் குறித்த தகவல்:

கனா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வாய்த்த இயக்குனர் அருண்ராஜா நெஞ்சுக்கு நீதி மூலம் பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறார். நம் நாட்டில் ஆணவத்தினால் ஒரு கொலை நடக்கக்கூடாது என்றும் இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் சமம் என்பதை அழகாக காட்டியிருக்கிறார். இந்தியில் வெளிவந்து வெற்றி அடைந்த படமாக இருந்தாலும் நமது தமிழகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப கதையை அழகாக மாற்றி அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே அருண்ராஜாவுக்கு ஒரு தனி கிளாப்ஸ் கொடுக்கலாம்.

படத்திற்கு ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே பக்கபலமாக அமைந்திருக்கிறது. திபு நினன் தாமஸ் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. யுகபாரதியின் வரிகள் உணர்வுபூர்வமாக இருக்கிறது. தமிழரசனின் வசனங்கள் நெஞ்சை வருடுகிறது. பல வசனங்கள் கண் கலங்க வைத்திருக்கிறது. மொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படம் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கும் ஒரு படமாக அமைந்திருக்கிறது.

பிளஸ்:

உதயநிதி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பு சிறப்பு.

அருண்ராஜா காமராஜ் இயக்கம் சிறப்பு.

திரைக்கதை, தமிழரசனின் வசங்கள், இசை எல்லாமே படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

அனைவருமே சமம் என்ற கருத்தை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்:

படத்தில் பெரிதாக குறை சொல்வதற்கு எதுவுமே இல்லை.

இறுதி அலசல்:

நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

மொத்தத்தில் நெஞ்சுக்கு நீதி – அனைவருக்கும் சமம் என்று கூறியிருக்கிறது.

Advertisement