வானம் கொட்டட்டும் படத்தின் திரைவிமர்சனம் இதோ..

By subhashini · 7/2/2020

இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து இருக்கிறார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்று இந்த வானம் கொட்டட்டும் படம் திரை அரங்கில் வெளியாகி உள்ளது. வானம் அளவுக்கு படம் கேட்டதா என்பதை பார்க்கலாம்…

கதைக்களம்:

சரத்குமார் தன் அண்ணன் பாலாஜி சக்திவேலை கொலை செய்ய முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விடுகிறார். இதே போல் தன்னுடைய மகனும் கொலைகாரனாக ஆக கூடாது என்று வைராக்கியத்தோடு தன் பிள்ளைகளை சென்னைக்கு அழைத்து வந்து தனியாக வளர்த்துகிறார் ராதிகா. பின் கஷ்டப்பட்டு உழைத்து தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குக்கிறார். விக்ரம் பிரபு முதலில் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று பலமுறை செய்கிறார். புது வியாபாரம் செய்து சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக விக்ரம் பிரபு அற்புதமாக நடித்து இருக்கிறார்.

குடும்பத்தை புரிந்து கொண்டு வியாபாரம் செய்து முன்னேற வேண்டும் என்ற அவருடைய துடிதுடிப்பு அழகாக உள்ளது. விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். இவர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த படத்தில் துறுதுறுவென சுட்டித்தனமான பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சரத்குமார் விடுதலையாகி குடும்பத்தை பார்க்க வருகிறார்.

நீண்ட நாள் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை அவருடைய பிள்ளைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபுவும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டு தவிக்கும் சரத்குமாரின் நடிப்பு வேற லெவல். இதனிடையே சிறையில் இருந்து வந்த சரத்குமாரை பழிவாங்க சரத்குமார் கொலை செய்த மகனான நந்தா காத்துக் கொண்டிருக்கிறார். ராதிகா மற்றும் அவருடைய பிள்ளைகள் சரத்குமாரை ஏற்றுக் கொள்கிறார்களா? பழிவாங்கும் எண்ணத்துடன் திரியும் மகன் சரத்குமாரை கொலை செய்தாரா? இதனால் விக்ரம் பிரபு தனது அப்பாவை காப்பாற்றினாரா? என்பதை படத்தின் சுவாரஸ்யமான கதை.

நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ராதிகா, சரத்குமார் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள். இந்த படத்திற்கு தூண்களாக சரத்குமாரும், ராதிகாவும் நடித்து உள்ளார்கள். வெள்ளந்தியான கிராமத்து மனிதரை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். இது முழுக்க முழுக்க சரத்குமார் படம் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார் சரத்குமார். தன் பிள்ளைகளை வைராக்கியத்துடன் வளர்த்த தாயின் நடிப்பில் ராதிகா புது முயற்சி செய்து உள்ளார்.

ஐஸ்வர்யாவின் முறை பையனாக சாந்தனு இந்த படத்தில் நடித்து இருக்கிறார். அவர் சொல்ல முடியாத ஆசைகளையும், கனவுகளையும் மனதுக்குள் அடக்கி வைத்து வெளிப்படுத்துவது காட்சி அருமையாக உள்ளது. படத்தில் மடோனாவின் குடும்ப பின்னணி சோகம் நிறைந்ததாகவே காண்பித்து உள்ளார் இயக்குனர். படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட், பாசம் பாணியில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் தனசேகரன்.

பிளஸ்:

ராதிகா, சரத்குமாரின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது.

படத்தின் இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

ராதிகா, சரத்குமார் இந்த படத்திற்கு தூணாக உள்ளார்கள்.

மைனஸ்:

இந்த படத்தில் சாந்தனு மற்றும் மடோனா செபாஸ்டின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாததது போல் உள்ளது.

விக்ரம் பிரபு கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

இறுதி அலசல்:

இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் பாணியில் அமைந்து உள்ளது. மொத்தத்தில் வானம் கொட்டட்டும் படம்-- பாச போராட்டம்.

behindtalkies AMP · Quick view
View full