சுந்தர்.சி விலகியது விபத்தல்ல, அண்ணாமலை போதும் ஒரு சம்பவம் நடந்தது - வைரமுத்து பகிர்ந்த தகவல்

By subhashini · 17/11/2025

தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் ரஜினிகாந்துடைய 173 வது படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார் என்றும் கமலஹாசன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வெளியானது.

https://www.youtube.com/watch?v=7QuOkRdSInw

ரஜினியின் சூப்பர் ஹிட் ஆன அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி- ரஜினி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்தது. கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றி எல்லாம் நிறைய செய்திகள் வந்தது. மேலும், இது தொடர்பாக ரஜினி- கமல்- சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தலைவர் 173 படம்:

மேலும், ரஜினியின் 'தலைவர் 173 'படத்தில் இருந்து சுந்தர் சி விலகிருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சுந்தர் சி வெளியிட்ட அறிவிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி உடைய தலைவர் 173 படத்தில் இருந்து நான் விலகுகிறேன். கனத்தை இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமே நடந்து விடுவதில்லை.

சுந்தர் சி விலகல்:

கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டதை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவையெல்லாம் உறுதுணையாக இருக்கும். இருந்தாலுமே தலைவர் படத்திலிருந்து நான் விலகுவது ரொம்ப கஷ்டமான முடிவுதான். இந்த முடிவு கட்டாயம் ஏற்பட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த அன்பிற்கும் நன்றி. அதோட என்னுடைய மதிப்பையும் அனைவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

வைரமுத்து பதிவு:

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,
சூப்பர் ஸ்டாரும்
உலக நாயகனும்
இந்தியக் கலையுலகின்
இருபெரும் ஆளுமைகள்

அவர்கள் இணைந்து
இயங்குவது என்பது
அட்லாண்டிக்கும் பசிபிக்கும்
ஆரத் தழுவிக்கொள்வது போன்றது

அவர்கள் தொட்டது
துலங்கவே செய்யும்

இயக்குநர் சுந்தர்.சி விலகியது
ஒரு விபத்தல்ல; திருப்பம்
அதில் யாரும்
கள்ளச் சந்தோஷம்
அடைய வேண்டாம்

வளைந்து செல்லும் நதி
ஒரு திருப்பத்திற்குப் பிறகு
வேகமெடுக்கும் என்பதே விதி
மாற்றம் ஒன்றே மாறாதது

‘அண்ணாமலை’ படத்தில்
வந்தேண்டா பால்காரன் பாடல்
எழுதுகிற வரைக்கும்
இயக்குநர் வசந்த் உடனிருந்தார்
ஏதோ ஒரு சூழலில்
அவர் விலக நேர்ந்தது

48 மணி நேரத்திற்குள்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
தன் இன்னொரு சீடனை
இயக்குநர் ஆக்கினார்;
சுரேஷ் கிருஷ்ணா

அது
ரஜினி வரலாற்றில்
தடம்பதித்த படமாயிற்று
இந்த மாற்றமும்
அப்படியொரு வெற்றியை எட்டலாம்

குழப்பம் கொடிகட்டும்
இந்தப் பொழுதில்
இருபெரும் கலைஞர்களுக்கும்
நாம் ஊக்கமும் உற்சாகமும்
ஊட்ட வேண்டும்

ஏனென்றால்
அரைநூற்றாண்டுக்கு மேல்
மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த
கலைஞர்கள் அவர்கள்
தொடருங்கள் தோழர்களே!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்? என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full