'உனக்குப் பார்வையுமில்லை, பக்தியுமில்லை' - தஞ்சை தேர் விபத்து குறித்து வைரமுத்து போட்ட பதிவு.

By Ajju · 27/4/2022

தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்து அநியாயமாக பல பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். மேலும், களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மேலும், தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டனர். அதோடு 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேர் விபத்து குறித்து ஊர் மக்கள் கூறியது:

அதோடு தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததால் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு தள்ளி நின்று இருந்தார்கள். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கூறி இருக்கின்றனர்.

தேர் விபத்துக்குக் காரணம் :

அதோடு சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்குக் காரணம் என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.

வைரமுத்துவின் இரங்கல் பதிவு:

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கூறியிருப்பது, "தஞ்சைத் தமிழர்களைத் தாக்கிய மின்சாரம் நெஞ்சைத் தாக்குகிறது. இறந்தார் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். அய்யகோ மரணமே! உனக்குப் பார்வையுமில்லை, பக்தியுமில்லை" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி வைரமுத்து பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரமுத்துவின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full