கனத்த இதயத்துடனும், மன நெகிழ்வுடனும் பாலா சார் - வணங்கான் குறித்து அருண் விஜய் உருக்கம்

By subhashini · 18/11/2024

வணங்கான் படம் குறித்து நடிகர் அருண் விஜய் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதோடு இவர் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

மேலும், பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேற கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கும் படங்கள் எல்லாம் அதிகமான பட்ஜெட் படங்கள் கிடையாது. சராசரி மனிதனின் அடிப்படை தேவையை உணர்த்தும் கருத்து படங்கள் ஆகும். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இயக்குனர் பாலா திரைப்பயணம்:

பின் சிறிய இடைவெளிக்கு பின் கடந்த 2022 ஆம் ஆண்டு வணங்கான் என்ற படத்தை இயக்க இருப்பதாக பாலா அறிவித்திருந்தார். முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தினுடைய சூட்டிங் ஒரு மாதம் நடந்த நிலையில் திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதற்கு பிறகு தான் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் கமிட் ஆகியிருந்தார்.

வணங்கான் படம்:

மேலும், சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் சூர்யாவை பாலா அடித்து விட்டதாகவும், இன்னும் வேறு தகவல்களையும் கூறியிருந்தார்கள். ஆனால், இது குறித்து பாலா- சூர்யா இருவருமே விளக்கம் கொடுக்கவில்லை. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் குறித்த தகவல்:

தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் குடும்பத்துடன் வணங்கான் படத்தை அருண் விஜய் பிரத்யோகமாக திரையிட்டு பார்த்திருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் அருண் விஜய் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

அருண்விஜய் பதிவு:

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full