குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ - என்ன நடந்தது.

By subhashini · 7/2/2022

கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குவது சின்னத்திரை சீரியல்கள். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பம்பரக்கண்ணாலே, சரோஜா தேவி, ரங்கூன், ஆர்கேநகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீகுமார் திரை பயணம்:

பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும்பங்கு பெற்றிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1, கலைஞர் டிவியில் மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் வானத்தைப்போல என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஷமிதா திரை பயணம்:

இதனிடையே இவர் 2009ம் ஆண்டு ஷமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமிதா வேற யாரும் இல்லைங்க, ‘தோழா தோழா தோல் கொடு’ என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷமிதா. பாண்டவர் பூமி படத்தின் மூலம் தான் இவர் மத்தியில் பிரபலமானவர். அதற்கு பிறகு இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார். பின் இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தீ விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்:

இந்நிலையில் ஸ்ரீ குமார் தன்னுடைய குடும்பத்துடன் தீ விபத்தில் சிக்கிக்கொண்ட அதிர்ச்சி தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பாண்டி பஜாரில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்து கொழுந்துவிட்டு எரிய உடனே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து இருக்கின்றனர். மேலும், இந்த விபத்து நடந்த போது பிரபல நடிகர் ஸ்ரீ குமார் தனது குடும்பத்துடன் அங்கு சிக்கியுள்ளார். அதுமட்டுமில்லை அவருடன் 70 நபர்களுக்கு மேல் சிக்கி கொண்டிருக்கின்றார்கள். பின் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துவிட்டு நடிகர் ஸ்ரீ குமார் உட்பட மக்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கின்றனர்.

தீயில் சிக்கிய நடிகர் ஸ்ரீ குமார் அளித்த பேட்டி:

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தீயில் சிக்கிய நடிகர் ஸ்ரீ குமார் கூறி இருப்பது, சென்னை பாண்டிபஜார் வணிக வளாகத்தில் குடும்பத்துடன் நான் சிக்கிக்கொண்டேன். மூன்றாவது தளத்தில் 70 பேர் நாங்கள் இருந்தோம். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு எங்களை உயிருடன் மீட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ரொம்ப நன்றி, கடவுளுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் ஸ்ரீகுமார் உடல் நலம் குறித்து கேட்டு வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full