எஸ் ஜே சூர்யாவிற்கு 'தனுஷ்'கோடி என்று பெயர் வைக்க காரணம் ஏன் ? - வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்.

By Ajju · 29/11/2021

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து மாநாடு படம் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் சிம்புவுக்கு நிகராக தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. பொதுவாக சிம்பு படங்கள் என்றாலே அதில் தனுஷை குறிப்பிட்டு எதாவது ஒரு சிறு வசனமாக வந்துவிடும். இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தின் கிளைமாக்ஸ்ஸில் கூட நீ அழிக்க வந்த அசுரன்னா நான் காக்க வந்த ஈஸ்வரன் டா என்ற வசனத்தால் தனுஷ் ரசிகர்கள் பலர் கோபமடைந்தனர். ஆனால், ஈஸ்வரன் படம் மாபெரும் தோல்வியடைந்தது.

இப்படி ஒரு நிலையில் மாநாடு படத்தில் வில்லனாக வரும் எஸ் ஜே சூர்யாவிற்கு ஏன் தனுஷ் கோடி என்று பெயர் வைக்கப்பட்டது என்ற காரணத்தை பேட்டி கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுகுறித்து தெரிவித்த அவர், ''ஒரு வலிமையான பெயர் வேண்டும் என்பதால் அந்தப் பெயரைத் தேர்வு செய்தோம். ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் சிம்பு என்றாலே தனுஷ் பெயர்தான் நினைவுக்கு வரும்.

எனவே அந்தப் பெயர் வைத்தாலே இயல்பாகவே ஒரு பவர் வந்துவிடும். அடிப்படையில் அவர்கள் இருவருமே நண்பர்கள்தான். இதற்காக கண்டிப்பாக தனுஷே போன் செய்து சந்தோஷப்படுவார்'' என்று கூறியுள்ளார். அதே போல இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட் ஆனது அரவிந்த் சாமி தான். ஆனால், இந்த படத்தில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full