முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு வசூல் செய்த விடுதலை 2 - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியிருக்கிறது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன்,கென் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்.
விடுதலை 2 படம்:
மேலும், விடுதலை 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அதாவது, உலக அளவில் முதல் நாளில் மட்டுமே 7 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு அடைந்ததால் இனி வரும் நாட்களில் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசூல் விவரம்:
அதோடு விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அதைவிட இரண்டு மடங்கு வசூல் செய்து இருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. முதல் பாகத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் சுரங்கத்தை தோண்டி அங்கிருக்கும் வளங்களை எடுக்க அரசாங்கம் முடிவெடுக்கிறது. இதனால் மக்களுடைய இடம் பறிபோகிறது என்று பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி தலைமையில் மக்கள் படை உருவாக்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
முதல் பாகம்:
இதனால் அரசாங்கம், மக்கள் படையை முழுமையாக ஒழித்துக் கட்ட ஒரு சிறப்பு படையை ஏற்பாடு செய்கிறது. மக்கள் படை மற்றும் சிறப்பு போலீஸ் படை இடையே நடக்கும் போராட்டத்தினால் பல உயிர்கள் இழக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சிறப்பு படையில் ஜீப் டிரைவராக கதையின் நாயகன் சூரி வருகிறார். பின் விஜய் சேதுபதியை போலீஸ் பிடித்து விடுகிறது. இத்துடன் முதல் பகுதி முடிகிறது. இரண்டாம் பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய் சேதுபதியிடம் விசாரணை நடத்துகிறார்கள். பின் அவரை வேறு ஒரு இடத்திற்கு சூரி அழைத்து செல்லும் போது காட்டுக்குள் இருவரும் சிக்கிக் கொள்வார்கள்.
இரண்டாம் பாகம்:
எந்த பக்கம் போவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி தன்னுடைய கதையை சொல்கிறார். கிராமத்துக்கு எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக கென் ஒரு கொலை செய்கிறார். இதனால் விஜய் சேதுபதி அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அப்போது போலீஸ் துரோகம் செய்ததால் கென்னையும் அவருடைய மனைவியையும் பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள். இந்த சமயத்தில் விஜய் சேதுபதிக்கும் உயிர் போகும் நிலைமை வருகிறது. பின் விஜய் சேதுபதியை அவர் நண்பர் காப்பாற்றுகிறார். அதன் பிறகு அவர் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விஜய் சேதுபதி போலீஸ் பீடியில் இருந்து தப்பித்தாரா? சூரி என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை.