காதலோட கடைசி நாள், இந்த வலி தேவை தான் - விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு. இதான் காரணமாம்.

By Ajju · 24/4/2022

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு இவர் நானும் ரவுடிதான், தானாசேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா கதீஜா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் இந்த படத்தின் சிங்கிள், டீசர், டிரெய்லர் எல்லாமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

படம் ரிலீஸ் தேதி:

இதனால் படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கிற்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எமோஷனலாக பதிவு ஒன்று போட்டிருக்கிறார். விக்னேஷ் அவர்கள் காதல், ரொமான்ஸ் என்று பிசியாக இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் நீண்ட உழைப்பினால் வெளிவர இருக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தை பற்றி விக்னேஷ் சிவன் பதிவில் கூறியிருப்பது, படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த ஐந்து நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது.

விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு:

என் லவ்வுடன், பேபி உடன் கடைசி ஐந்து நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால், காதல் என்றாலே வலி இருக்கும். இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிறேன் என்று அனிரூத் உடன் படம் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். தற்போது இவரின் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி, அம்மா என்ற பாடலையும் எழுதி இருக்கிறார். தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full