டிவியில் ஒளிபரப்பான அரை மணி நேரத்தில் நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு- கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்

By Rajkumar · 26/8/2024

'நீயா நானா' சிறுவனுக்கு, இசையமைப்பாளர் தமனை தொடர்ந்து தளபதி விஜய் செய்திருக்கும் உதவி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ், முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கிய படம் 'வாழை'. இவர் சிறு வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாரி செல்வராஜ் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், மாரி செல்வராஜ் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது 'நீயா நானா'. ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் 'நீயா நானா'. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நீயா நானா நிகழ்ச்சி:

எனவே, சமீபத்தில் வாழை படம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அதில் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவன், தான் பழக்கடையில் வேலை செய்வதால் மூட்டை தூக்கும் வேலைகள் செய்வேன் என்று கூறினார். மேலும், தான் தூக்கம் மூட்டைகள் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். அதனால், அவருக்கு தோள்பட்டை வலி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறியிருந்தார்.

View this post on Instagram

A post shared by Vijay Fans Trends (@vijayfanstrends_vft)

மூட்டை தூக்கும் சிறுவன்:

மேலும், காலை 5:30 மணியில் இருந்து பத்து மணி வரை வேலை செய்வதாகவும். அதற்குப் பிறகு, சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விட்டால் மூன்று கிலோ மீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவதாக கூறினார். அப்படி நடந்து போகும்போது, நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வந்து அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே போவேன் என்றார். அதனை தொடர்ந்து பேசிய சிறுவனின் தாய், முதலில் நானும் வேலைக்கு போயிட்டு இருந்தேன். இப்போ எலும்பு தேய்மான பிரச்சனைகள் இருப்பதால் போக முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறியிருந்தார்.

உதவிக்கரம் நீட்டிய தளபதி:

இதை அறிந்த விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' உடனடியாக மாணவனின் குடும்பத்துக்கு உதவி செய்துள்ளது. அதை மாணவனின் தாய் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில், விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு போயிருந்தோம். அதில் என் மகன் படும் கஷ்டங்களைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டான். நிகழ்ச்சியை பார்த்த அரை மணி நேரத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் செயலாளர் ஆனந்த் அண்ணன், கோவில்பட்டியில் உள்ள சுரேஷ் சத்யாவிடம் சொல்லி, எங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

விஜய் சாருக்கு நன்றி:

மேலும், எனக்கு எலும்பு தேய்மானம் உள்ளதால் உடனடியாக மெத்தை மற்றும் வீட்டுக்கு தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். என் மகன் கல்லூரி படிப்புக்கு உதவுவதாக கூறியிருக்கிறார்கள். அதோடு எங்களது அக்கவுண்டில் ரூபாய் 25000 போட்டுள்ளனர். விஜய் அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என் மகன் பேசியதை, விஜய் பார்ப்பார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர் தமன், இந்தச் சிறுவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பதாக உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full