மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் தந்தை - எப்படிஇருக்கிறது சமுத்திரகனியின் விமானம் - விமர்சனம் இதோ.

By Rajkumar · 9/6/2023

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. இவருடைய நடிப்பிலும் படைப்பிலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சமுத்திரகனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விமானம். இந்த படத்தில் சமுத்திரகனியுடன், மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சிவ ப்ரசாத் யானலா எழுதி இயக்கி இருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு சரண் அர்ஜுன் இசை அமைத்திருக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் - கிரண் கொரப்பட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் சென்னை குடிசை பகுதியில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதித்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். சமுத்திரகனியின் மனைவி இறந்து விடுகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவன் நான்காவது வகுப்பு படிக்கிறான். இவனுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும். சாப்பிடாமல், தூங்காமல் விமான நிலைய காம்பவுண்டில் நின்று கொண்டே விமானங்கள் பிறப்பதை பார்த்து ரசித்து கொண்டிருப்பான்.

அது மட்டுமில்லாமல் விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட்டாக வேண்டும் என பல கனவுகளுடன் சமுத்திரகனியின் மகன் இருக்கிறார். இதை அறிந்த சமுத்திரக்கனி தன் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காக எந்த எல்லை வரை செல்லலாம் என்றும் நினைக்கிறார். இறுதியில் சமுத்திரகனியின் மகன் ஆசை நிறைவேறியதா? இதற்காக சமுத்திரக்கனி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

தந்தை- மகன் பாசப் போராட்ட கதையை மையமாகக் கொண்ட படம். பாசக்கார தந்தை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கட்டண கழிப்பிட தொழிலை நேர்மையாக செய்வது, மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில் மகனை வாஞ்சையாக அழைத்து செல்வது, மகனுக்காக துடிப்பது, குடும்பத்துக்காக நாள்தோறும் கஷ்டப்படுவது என ஏழை தந்தையாகவே படத்தில் சமுத்திரக்கனி வாழ்ந்து இருக்கிறார்.

இவரை அடுத்து சமுத்திரகனியின் மகனாக வரும் மாஸ்டர் துருவன் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டு படிப்பில் திறமையாக படிப்பது, தன்னுடைய கனவுக்காக போராடுவது, விமானத்தை பார்த்து ரசிக்கும் இடங்கள் என திறமையாக நடித்திருக்கிறார். ரொம்ப ரொம்ப தந்தை- மகன் சென்டிமென்ட் படமாக இருக்கிறது. இந்தப் படத்தில் அனுசுயாவின் கவர்ச்சிகரமான கதாபாத்திரம் தேவையற்றதாக இருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா செய்யும் காட்சிகள் சிரிப்பு வரவில்லை. பார்வையாளர்களை கடுப்பை தான் ஏற்றுகிறது. சில சமயம் பார்வையாளர்களை சோதிக்கவே வைத்திருக்கிறது. சரணின் இசை கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பின்னணி இசை சீரியல் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கவுரவ வேடத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜாதி, பணம், உடல் நலம் போன்ற அனைத்து விதங்களிலும் மாற்றுத்திறனாளி அனுபவிக்கும் கஷ்டத்தை திரையில் இயக்குனர் காட்டி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

ஆனால்,அத்தனை பிரச்சினைகளையும் சமுத்திரக்கலையின் தலையிலேயே கட்டி படம் முழுக்க செல்வதுதான் கொஞ்சம் கடுப்பை ஏற்றிருக்கிறது. சொல்லப்போனால் பார்வையாளர்களை அழ வைக்காமல் விடமாட்டேன் என்று இயக்குனர் சபதம் எடுத்திருப்பார். அந்த அளவிற்கு சோகத்தில் திரையரங்கமே மூழ்கும் அளவிற்கு படம் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை யூகிக்கக்கூடிய காட்சிகள். திரைக்கதையில் சுவாரசியமும் இல்லை கதையும் இல்லை. சலிப்புதான் வந்திருக்கிறது. மொத்தத்தில் சமுத்திரகனியின் விமானம் படம் ரொம்ப ரொம்ப மொக்கையான படமாக இருக்கிறது.

நிறை:

சமுத்திரகனி, மாஸ்டர் துருவன் நடிப்பு சிறப்பு

தந்தை- மகன் பாச கதை

மாற்றுத்திறனாளியின் பிரச்சனை கூறியிருக்கிறது

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிறைகள் எதுவுமே இல்லை

குறை:

அரைத்த மாவை இயக்குனர் அரைத்து வைத்திருக்கிறார்

சுவாரசியம், விறுவிறுப்பு, சஸ்பென்ஸ் எதுவுமே இல்லை

சொல்லப்போனால் கதைக்களமே இல்லை

பின்னணி இசையும் சீரியல் ரேஞ்சுக்கு இருக்கிறது

பாடல்கள் படத்தோடு செட்டாகவே இல்லை

காமெடி என்று பார்வையாளர்களை கடுப்பேற்றி இருக்கிறார்கள்

மொத்தத்தில் சமுத்திரக்கனி விமானம்- மேலே பறக்காமல் தரையிலேயே தங்கி விட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full