எப்படி இருக்கிறது சமுத்திரகனியின் 'விநோதய சித்தம்' - முழு விமர்சனம் இதோ.

By Rajkumar · 14/10/2021

சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘விநோதய சித்தம்’ படம் நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாலாஜிமோகன், ஹரிகிருஷ்ணன் அசோக் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்:

தம்பி ராமையா ஒரு கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அலுவலகத்திலும், வீட்டிலும் தம்பி ராமையா எப்போதும் சிடுசிடுவென்று கோபமாகவே இருப்பார். தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையாவின் 25 வது திருமண நாளைக் கொண்டாட குடும்பத்தினர் தயாராகி வருகின்றன. அந்த சமயத்தில் தம்பி ராமையாவுக்கு அலுவலகத்தில் இருந்து அவசர வேலை ஒன்று வருகிறது.

இதற்காக இவர் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பின் தம்பி ராமையா அவர்கள் தன் வேலையை முடித்து திரும்பும் போது விமானத்தை தவற விடுகிறார். பிறகு காரில் சென்னைக்கு வரும் தம்பி ராமையா விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார். அந்த நேரத்தில் தான் நம்ப சமுத்திரகனி என்ட்ரி கொடுக்கிறார். அவர் தன்னை நேரம் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர் தம்பி ராமையாவிடம் நீங்கள் இறந்து விட்டதால் உங்களின் நேரம் முடிந்து விட்டது.

அதனால் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என சொல்கிறார். உடனே தம்பி ராமையா தனக்கு முடிக்க வேண்டிய கடமைகள் சில இருக்கு. அதை முடித்து விட்டு வந்து விடுகிறேன் என சமுத்திரகனியிடம் கொஞ்சி வேண்டுகோள் வைக்கிறார். சமுத்திரக்கனியும் 90 நாட்கள் அவகாசம் தம்பி ராமையாவுக்கு தருகிறார். இந்த 90 நாட்களில் நீங்க என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். 90 நாட்களில் தம்பி ராமையா என்னவெல்லாம் செய்தார்? கடைசியில் தம்பி ராமையாவை, சமுத்திரக்கனி கொண்டு சென்றாறா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் முழுவதும் சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தம்பி ராமையா தன்னுடைய அனுபவ நடிப்பை மிக திறமையாக வெளிப்படுத்துகிறார். வழக்கம்போல சமுத்திரகனி அவர்கள் தனது புரட்சிகரமான வசனங்களை படத்தில் அள்ளி வீசி இருக்கிறார். அதே போல் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். கதைக்கு பாடல்கள் தேவையில்லை என்பதால் படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது நன்றாக உள்ளது.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் சத்யா நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். வாழ்க்கையில் எல்லாமே முன்கூட்டியே நிர்ணயக்கப்படுகின்ற ஒன்று. நாம் வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுடன் நல்ல மனதோடும் கருணையோடும் வாழ வேண்டும் என்ற செய்தியை படத்தின் மூலம் இயக்குனர் சமுத்திரகனி சொல்லி இருக்கிறார். காதல், அதிரடி சண்டைக்காட்சிகள், குத்துப்பாட்டு என இல்லாமல் கதையை சுகமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

ப்ளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக நடித்துள்ளார்கள்.

நாம் வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுடன் எப்படி வாழ வேண்டும் என்ற செய்தியை அருமையாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையும் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

படத்தில் வசனங்களும், தம்பி ராமையா, சமுத்திரக்கனி நடிப்பும் வேற லெவல்.

மைனஸ்:

கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் கொஞ்சம் நீண்டு கொண்டு போவது போல் உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். படத்தை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே கண்ணீர் வரும் அளவிற்கு உணர்வுபூர்வமான காட்சிகளை காண்பித்துள்ளார்.
ஒவ்வொரும் பார்க்க வேண்டிய படம்.

மொத்தத்தில் வினோதய சித்தம்-- வாழ்க்கையின் தத்துவம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full