சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் : கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹேம்நாத்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.
https://www.youtube.com/watch?v=X38LS8DBLss
அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று (டிசம்பர் 14) சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோரிடம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார்.
நேற்று நண்பகல் 12 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. நேற்று சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் இன்று (டிசம்பர் 15) சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.