உன்ன மாதிரிபணக்காங்க பப்லிசிட்டிகாக கோவிலுக்கு பணம்தான்கொடுப்பாங்க, ஆனா நீ - சிவாஜியின் செயலை கண்டு பாராட்டிய காஞ்சி பெரியவர்.

By Arun · 16/4/2023

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து காஞ்சி பெரியவர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும். மேலும், வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். நல்ல குரல்வளம், தெளிவான பேச்சு, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று மக்களால் அழைக்கப்படுகின்றார்.

சிவாஜி கணேசன் குறித்த தகவல்:

நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். சர்வதேச அளவில் சிறந்த நடிகர் என்ற விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன்.

காஞ்சி பெரியவர் சொன்னது:

இந்நிலையில் காஞ்சி பெரியவர் தன்னிடம் கேட்டதற்கு சிவாஜி கணேசன் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதானே சிவாஜி கணேசன்? என்று காஞ்சிப் பெரியவர் கேட்டார். அதற்கு நான், ‘ஆமாங்கய்யா! நான்தான்‘ என்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். இதை அடுத்து காஞ்சி பெரியவர் சொன்னது, உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். அதற்கு அவர்கள் ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள்.

கோவில் யானைகள் :

திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது, யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.

உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்

நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோவில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால்,யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால், உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள் என்று கூறினார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full