ரஜினியை வைத்து படம் எடுக்க முடியாது என்று பிரேமம் இயக்குனருக்கு மெசேஜ் செய்துள்ள ரஜினியின் மகள் - இயக்குனரின் ஷாக்கிங் பதிவு.

By subhashini · 31/12/2021

ரஜினிகாந்த்துடன் தான் படம் பண்ண மாட்டேன் என்று கூறியதாக வந்த செய்திக்கு 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்து இருக்கிறார். ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.

வெற்றியை கொடுத்த நேரம் - பிரேமம் :

பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம். இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப், மற்றும் ஜெயம் ரவியின் தீபாவளி படமும் கலந்த கலவையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். பிரேமம் படத்திற்கு முன்பாகவே இவர் 'நேரம்' படத்தை இயக்கி இருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மலையாளத்தில் 'கோல்ட்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினிக்கு நோ சொன்னாரா :

பிரிதிவிராஜ், நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அல்போன்ஸ் புத்திரன் ரஜினியை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சொன்னதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தான் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அல்போன்ஸ் புத்திரன் 'பிரேமம் படம் வெளியான பின்னர் ஒரு இயக்குனராக ரஜினிகாந்த் சாருடன் சேர்ந்து ஒரு படத்தை இயக்க விரும்பினேன். பெரும்பாலான இயக்குனர்களுக்கு அவருடன் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.

மெசேஜ் செய்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் :

2015 ஆம் ஆண்டு ஒரு முறை ஆன்லைன் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் ரஜினிகாந்த்தை வைத்து படம் எடுக்க முடியாது என்று சொல்லி விட்டதாக செய்தியை நான் பார்த்தேன்.அந்த செய்தி அதிகம் பரவியது. அதை பார்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் செய்தார். அதற்கு நான் பிரேமம் திரைப்படத்திற்குப் பின்னர் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை என்று கூறினேன். அதை அவரும் புரிந்து கொண்டு ரஜினி சாரிடம் இதைப் பற்றி கூறியிருக்கிறார். இந்த விஷயம் அப்போது முடிந்துவிட்டது'ஆனால் அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய கோல்ட் என்ற கதையை ஒரு குணச்சித்திர நடிகருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆயிரம் கோடி ஈட்டி இருக்கும் :

அப்போது அவர் என்னிடம் சொன்னது ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று கூறிய இயக்குனர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார் இதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், அதை நான் வெளிக்காட்டவில்லை.2015 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த போலியான செய்தி என்னை கவலையடைய செய்து கொண்டே இருக்கிறது. அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என்னுடைய ஆசைப்படி ரஜினிகாந்துடன் படம் அமைந்திருந்தால் அது கண்டிப்பாக ஆயிரம் கோடியை ஈட்டி இருக்கும்.

ரசிகர்களுக்கு அல்போன்ஸ் வைத்த வேண்டுகோள் :

அதன்மூலம் ரசிகர்கள் மகிழ்ந்ததோடு அரசாங்கத்திற்கும் வரி கிடைத்திருக்கும். இந்த இழப்பு எனக்கும், ரஜினிகாந்த் சாருக்கும் ரசிகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட இழப்பு. அந்த செய்தியை போட்ட அந்த நபர், அந்த போலி செய்திக்கு பின்னால் இருக்கும் அந்த மூளை, ஒரு நாள் கண்டிப்பாக என் முன்னே வந்து நிற்பார். அந்த நாளுக்காக காத்து கொண்டு இருங்கள். மேலும், ரஜினி சாருடன் நான் படம் பண்ண வேண்டும் என்று விரும்புவர்கள் எனக்காக எப்போதும் போல பிரார்த்தனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full