இந்தியாவில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா? மனிஷாவுக்கு குவியும் எதிர்ப்பு.
பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் வெளியான ஃபெரி பெட்டாலா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார். அதுவும் ஹிந்தியில் தான் இவர் முதன் முதலாக நடிக்க தொடங்கினார். பின் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கியத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
https://twitter.com/mkoirala/status/1262409634498953216
அதனை தொடர்ந்து இந்தியன்,பாபா,முதல்வன் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் அதிகம் இந்தி படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேபாள அரசு தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நேபாள அரசின் இந்த செயலுக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து புதிய வரைபடத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி என்று கூறி உள்ளார்.
இதனால் இந்தியாவில் இருந்து மனிஷா கொய்ராலாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தியாவில் கை நிறைய சம்பாதித்து சாப்பிட்டு தற்போது எங்களுக்கு எதிராக நிற்கிறார். உங்களுக்கு வெட்கம் இல்லையா? உண்ட வீட்டுக்கு துரோகமா? எல்லை பிரச்சினையில் நாடுகள் பேசி தீர்த்து கொள்ளட்டும். தனிநபர் பேசக்கூடாது. தற்போது நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நேபாளம் சென்று விடுங்கள் என்று பல விதமாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.