ரோகிணி தியேட்டர் விவகாரம், சாதிச்சான்றிதழை ஆய்வு செய்த போலீஸ் - வழக்கில் திடீர் மாற்றம்

By Arun · 18/4/2023

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவிபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படத்தை காண முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கூடி கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ''படம் பார்க்க வந்தவர்கள் அவர்களுடன் சில குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது எங்களுடைய திரையரங்க ஊழியர்கள் இரண்டு வயது, ஆறு வயது எட்டு வயது மற்றும் பத்து வயது சிறுவர்களுக்கு மட்டும் தான் அனுமதியை மறுத்திருந்தார்.

ஆனால் அதற்குள்ளாக அங்கே சூழ்ந்த சில ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக சித்தரித்து விட்டார்கள். ஆனால், இதே குடும்பத்தினர் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது' என்று குறிப்பிட்டு அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் திரையரங்கற்குள் அமர்ந்து படத்தை பார்க்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தனர். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

இதனை தொடர்ந்து ரோகினி திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்தபோது, அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரோகினி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full